ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்

அளவற்ற அருளாளனின்
என்றும் - நிகரற்ற அன்பாளனின்
களவற்ற உள்ளங்களில்
நாளும் - குறைவற்று வாழ்பவனின்

நிறைவான அருள்நாளிது
நெஞ்சம் - நிமிர்கின்ற பெருநாளிது
கரையற்ற கருணையினை
ஏந்திக் - கொண்டாடும் திருநாளிது

மண்ணாளும் செல்வந்தரும்
பசியில் - மன்றாடும் வறியோர்களும்
ஒன்றாகக் தோளிணைந்தே
தொழுது - உயர்கின்ற நன்நாளிது

இல்லாதார் நிலையறிந்து
நெஞ்சில் - ஈகையெனும் பயிர்வளர்த்து
அள்ளித்தினம் பொருளிறைக்க
வறுமை - அழிந்தொழியும் திருநாளிது

சொந்தங்கள் அள்ளியணைத்து
நட்பின் - பந்தங்கள் தோளிழுத்து
சிந்துகின்ற புன்னகையால்
உறவைச் - செப்பனிடும் சுகநாளிது

உள்ளத்தின் மாசுடைத்தும்
தளரும் - உடலுக்குள் வலுவமைத்தும்
நல்லின்ப வாழ்வளிக்கும்
வலிய - நோன்பில்வரும் பெருநாளிது

நபிகொண்ட பண்பெடுத்து
அந்த - நாயகத்தின் வழிநடந்து
சுபிட்சங்கள் பெற்றுவாழ
நம்மைச் - சேர்த்திழுக்கும் பிறைநாளிது

சமத்துவமே ஏந்திநின்று
என்றும் - சகோதரத்தைச் சொல்லிவந்து
அமைதியெனும் கொடிகளேற்றி
எவர்க்கும் - அன்புசிந்தும் பொன்னாளிது

அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்
இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

ஈத் முபாரக்

அன்புடன் புகாரி


No comments: