கடும் வெயில் காலத்தில், தலை முதல் கால் வரை ஒருவரை கருப்புத் துணி கொண்டு மூடச்சொல்வது அந்த மனிதர் மீதான அடக்குமுறை தான். இந்த அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் இசுலாமிய பெண்கள் தான். அதை அவர்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது எது? மதமா இல்லை மதவெறி பிடித்த மனிதர்களா? எதுவாகினும் அப்பெண்கள் அதை அனுபவிக்கக் காரணம் இசுலாமிய வீட்டில் பெண்ணாகப் பிறந்தது தான் - சுபாசினி சிவா
நீங்கள் ஒரு மதத்தை அதில் பெண்கள் உடுத்தும் உடை கொண்டுமட்டும்தான் பார்க்கிறீர்களா?
நான் கனடாவில் வாழ்கிறேன். கோடையும் வந்துவிட்டது. டவுண்டவுன் - நகர மத்திக்குச் சென்றால், எதிர் இருக்கைப் பெண்ணின் ஆடை, ஆடையே இல்லாததாய் இருக்கிறது. உங்களுக்கு விரிவாகச் சொல்லத் தேவை இருக்காது என்று நம்புகின்றேன்.
இன்னொரு பக்கம் ஒரு நாட்டின் கலாச்சார உடை காரணமாக கறுப்புக்குள் கண்கள் மட்டுமே தெரியும்படி பெண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இஸ்லாம் மதம் படி கண்ணியமான உடை உடுத்த வேண்டுமே தவிர இதெல்லாம் அவசியமானதல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதன் மத நூலான குர்-ஆனை வாசித்தறிய வேண்டும்.
ஏசுநாதரின் அம்மா எப்படி உடை உடுத்தி இருந்தார்கள் என்று அறிவீர்களா? ஏசுநாதரின் அம்மா மட்டுமல்ல அப்போது அங்கு வாழ்ந்த எல்லோருமே என்ன உடை உடுத்தினார்கள் என்று தெரியுமா?
நம் தமிழ்ப்பாட்டன் ஒரு கைக்குட்டையைக் கோவணமாய்க் கட்டித் திரிந்தான். தமிழ்ப்பாட்டியோ 16 முழச் சேலையைச் சுற்றிச் சுற்றிக் கட்டிக்கொண்டு நின்றாள்.
அந்தச் சேலையை வெட்டினால் ஒரு 100 பாட்டனாவது ஆடைகட்டிக் கடைவீதிக்கு வந்துவிடுவான்.
தமிழ்ப்பாட்டன் தமிழ்ப்பாட்டிகளை அடிமைகளாய் வைத்திருந்தான் என்றா சொல்வோம்?
அறிவு, அன்பு, பண்பு, நட்பு, நாகரிகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வளரட்டும். பிறகு பாருங்கள் அடக்குமுறை என்ற சொல்லே காணாமல் போகும்.

No comments: