தொல்காப்பியத்தை மரபுப் பாக்கள்  மட்டுமே அண்டமுடியும் என்ற நிலை மாற்றி நீங்கள் செய்த தொல்காப்பியக் கவிதை பற்றி கூறுவீர்களா?  

தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது ஒவ்வொரு தமிழனுக்கும் மிக நெருக்கமானதோர் உறவு. பெரும்பாலும் தாய் சேய் பந்தம்.

யார் வேண்டுமானாலும் அந்தத் தாயின் மடியில் அமரலாம். அப்படி அமர இயன்றால்தானே தமிழ் நமக்குத் தாயாக இருக்க முடியும்?

அம்மா பால் வேண்டும் என்றால் தாய் தருவாளா மாட்டாளா?

ஆனால், நாம் கேட்கும்வரைகூடக் காத்திருக்காமல் பால் தரும் அன்புத் தாய்தான் தமிழ்.

அவளை நிராகரித்து நடக்கும் வழிதவறிய மகனாக நான் இருக்கக் கூடாது என்பது என் விருப்பம், அதுவே என் தமிழ்த் தாயின் நெருப்பு விருப்பமும்கூட.

தொல்காப்பியம் பற்றி கவிதை எழுத வேண்டும் என்று நான் என் தாயிடம் கேட்டு நின்றேன், அவள் அள்ளித் தந்ததே தமிழ்காப்புத் தொல்காப்பியம் என்ற கவிதை.

பெற்ற தாய் என்பவள் மகனைவிட முதுமையானவளாகத்தான் இருப்பாள். ஆனால் தமிழூட்டும் தமிழ்த்தாயோ வினோதமானவள். முதுமையான அந்தத் தாயே என்னிலும் இளையவளாகவும் இருக்கிறாள்.

இன்றைநாள் கவிதைகளை என்னிலும் அவளே உச்சிமுகர்ந்து நேசிக்கிறாள் தன் இளமையை உற்சாகமாகக் கொண்டாடுகிறாள்

உலகில் உனக்கொரு தாய் எனக்கொரு தாய் அவனுக்கொருதாய் என்றுதான் தாய்மார்கள் இருப்பார்கள். ஆனால் எனக்கும் என்னைப் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும், அவர்களையும் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும், இன்னும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஒரே தாய் என்று இருப்பதுதான் எத்தனைப் பேறு?

-அன்புடன் புகாரி

No comments: