இறைவன்
நாயகத்தின் வழியாக
தன் புகழை உலகறிய
நிலைநாட்டிக்கொண்டான்

அறவழிப் பாதையே
மறுக்கமுடியாத இறுதிப்பாதை
மாற்றமில்லாத உறுதிப்பாதை
என்று அறுதியிட்டுச் சொன்னான்

தீயன வென்றெடுக்கும்
வல்லமை வழிகளை
வரைபடமாக்கித் தந்தான்

உலக அமைதிக்கு
உத்திரவாதம் தந்தான்

நம்பிகை இழைகளைச்
சிறகுகளாய் வளர்த்தெடுத்து
வலிமைகூட்டி வானம் கடந்தும்
நிம்மதியில் பறக்கச் செய்தான்

அளவில்லா அன்பு தந்தான்
அரும்பெரும் அமைதி தந்தான்
ஒப்பிலாப் பண்பு தந்தான்
ஒன்றுபடும் பணிவு தந்தான்

கரையில்லா ஆற்றல் தந்தான்
குறைமனத் தேற்றல் தந்தான்
வைரமாய் யாக்கை தந்தான்
வளம்நிறை வாழ்க்கை தந்தான்

எல்லாப் புகழும்
இறைவனுக்கே என்று
நன்றிப் பெருக்கெடுத்தக்
குழை நெஞ்சம்
கூறும் சொற்களின்
எழுத்துக்களாகவும்
அவனே இருக்கின்றான்

-அன்புடன் புகாரி

No comments: