கவிஞர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா?

தேனீக்கள் பிறக்கின்றன. ஆனால் பிறக்கும்போது அவை வெறும் ஈக்களாக மட்டுமே இருக்கின்றன.

தேனின் சுவையறிந்து, தேன் தேடும் தாகம் வளர்த்து, அதைத் தேடிச் சென்று லாவகமாய் எடுத்து வந்து கூடு சேர்க்கும் திறமையை அவை வளர்த்துக்கொள்கின்றன.

கனடாவில் எனக்கு ஒரு கவிஞரைத் தெரியும். கனடா வந்த நாள் முதல் நான் அவரை அறிவேன். தன் நாற்பது வயதுவரையிலும்கூட அவர் கவிதைகள் எதுவும் எழுதியதே கிடையாது. ஆனால் அதன் பின் அவர் பல நல்ல கவிதைகளைப் படைத்தார், விருதுகளும் பெற்றார், ஒரு கவிஞராகவே புகழோடு மரணித்தார்.

ஆகவே ஒவ்வொருவரும் கவிஞராகவே பிறக்கிறார்கள். ஆனால் கவிஞராய்த் தன்னை வளர்த்துக்கொள்ளாதவரை அவர் கவிஞராய் ஆவதே இல்லை.

கவிதை எழுதுவது என்பது ஒரு வகை மனது. அந்த மனது சிலருக்குச் சிறுவயதிலேயே வாய்த்துவிடுகிறது. சிலருக்கோ சில அனுபவங்களும் தனிமையும் தாகமும் அமையும்போது வாய்க்கிறது. சிலர் அந்த மனதைக் காலமெல்லாம் கட்டிக் காத்துத் தக்க வைத்துக்கொள்கிறார்கள். சிலரோ வாலிபம் முடியும்போதே அதைப் பறிகொடுத்தும்விடுகிறார்கள்.

வெறும் சில்லரை உணர்வுகளைத் தாண்டிய நிலையில் ஆழமாய் அழுத்தமாய் உயிரில் பதிந்த ஒரு மனது என்றென்றும் கவிதை மனதாகவே இருக்கும்.

அன்புடன் புகாரி

No comments: