நான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு என் கவிதையையோ உரையையையோ தொடங்குவது வழக்கம். அதற்காக நான் அவ்வப்போது தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிக்கொண்டே இருப்பேன். அவற்றுள் சில இங்கே. இவற்றுள் எந்த வாழ்த்து உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது என்றும் ஏன் என்றும் கூறுனால் மகிழ்ச்சி

கூகுளின் நெற்றியில் - தமிழே
நீயொரு குங்குமப் பொட்டு

செல்பேசி அலைகளில் - தமிழே
நீயொரு பொங்கு மாக்கடல்

இணையக் கூடுகளில் - தமிழே
நீயொரு தாய்ப் பறவை

கணினி முற்றங்களில் - தமிழே
நீயொரு கோடி நிலா

முகநூல் முகப்புகளில் - தமிழே
நீயொரு தேவதை நாட்டியம்

டிவிட்டர் இழைகளில் - தமிழே
நீயொரு ட்ரில்லியன் மீட்டர்

வலைப்பூ வனங்களில் - தமிழே
நீயொரு தீராத் தேன்கூடு

மின்னஞ்சல்கள் தோட்டங்களில் - தமிழே
நீயோர் ஆடும் பொன்னூஞ்சல்

குழுமக் கருத்தாடல்களில் - தமிழே
நீயோ நான்காம் தமிழ்ச்சங்கம்

தமிழே தமிழே

அன்று நீ சங்கத் தமிழ்
இன்று நீ டிஜிட்டல் தமிழ்

நாளை வரும் நவீனத்திலும்
நீயே தமிழே தாயே

உனக்கு என்
தலையாய முத்த வணக்கம்


****


சந்திரனில் கையசைத்து
       செவ்வாயில் கால்பதித்து
மந்திரமாய் மின்வெளியில்
       மந்தகாசம் செய்கின்றாய்
எந்திரமாய்ச் சென்றவாழ்வை
       இழுத்துவரும் உந்தனுக்கு
வந்தனங்கள் தந்தவண்ணம்
       வருகின்றேன் தமிழ்த்தாயே
 
****

செம்மொழியே செம்மொழியே
செந்தமிழர்த் தாயே
செம்மொழியே செம்மொழியே
என்றானாய் என்றோ

செம்மொழியே செம்மொழியே
என்றறிந்தும் அன்றே
செம்மொழியே செம்மொழியே
என்றழைத்தார் இல்லை

செம்மொழியே செம்மொழியே
இன்றிதுவோர் மாயம்
செம்மொழியே செம்மொழியே
வந்ததென்ன ஞானம்

செம்மொழியே செம்மொழியே
இன்றேற்றார் மூடர்
செம்மொழியே செம்மொழியே
மன்னிப்பாய் தாயே

****

யுனித்தமிழே
இனிக்கும் கணித்தமிழே

மின்தமிழே
மயக்கும் எண்தமிழே

வலைத்தமிழே
வியக்கும் தொலைத்தமிழே

உலவுதமிழே
இணையம் பழகுதமிழே

சில்லுத்தமிழே
கணியுகச் சொல்லுத்தமிழே

கையகத்தமிழே
வணக்கம் வையகத்தமிழே

இன்னும் சிலவற்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கண்டதும் இடுகிறேன்

அன்புடன் புகாரி

No comments: