காதலர்தினம் வந்துவிட்டது


என்
உயிர்த்துடிப்பின் ஓசைகளை
இன்றுன்னிடம் எப்படியாவது
மொழிபெயர்த்துவிடவேண்டும்

அன்பே...
உன் தாவணிச் சிறகினைப்
பூவென விரித்து
என் காதல் வனத்துக்குள்
நீ பறந்து வரப்போகும்
அந்த நாள் எது?

கவிதையில் தொடங்கினேன்:
நீ இப்போதெல்லாம்
தாவணி போடுவதே இல்லை
செல்லம்...

தினம் கனவுகளின் தழுவல்களில்
கரைந்து போகும் உணர்வுகளை
நிஜமாய்ப் பொழியப் போகும்
அந்த நேரம் எது?

அடுத்த வரி கோத்தேன்:
உன் ”வால்பேப்பர்” விழிகள்
அலட்சியப் பார்வை வீசுகின்றன

கண்ணே
உன்னைக் காணாக் கணங்களில்
காற்றில்லாக் கூண்டுக்குள்
மூச்சுவிடத் தவிக்கும்
இளங்கிளி நான்
நினைவுப் புதை குழிக்குள்
நிமிசம் தவறாமல் மூழ்கும்
முது மான்

மேலும் தொடர்ந்தேன்:
புருவங்களைச் செதுக்கிச்
சீர்செய்ய விரைகிறாய்...

அன்பே இத்துடன் என்
தீ மூச்சைத் தூதுவிடுகிறேன்
வந்து விடு
உன் வரவுக்காக நான்
வழிமேல் விழியை அல்ல
என் உயிரையே வைத்துக்
காத்துக் கிடக்கிறேன்

கவிதையை முடித்துவிட்டேன்:
அஞ்சலைச் சொடுக்கும்முன்
என்னுடன்
விழி
மாற்றிக்கொண்டிருந்த
நீ
ஆள்
மாற்றிவிட்டாய்
என்ற
அவசரத் தகவல்...

No comments: