தினமொருகவிதை சொக்கன் திருமணநாள் வாழ்த்து


இணையத்தில் கேள்விப்பட்டேன்
இலக்கியத்தில் தொட்டுப்பார்த்தேன்
அணையாத தாகத் தோடும்
அணுவிசையின் வேகத்தோடும்

மழைக்காலக் காற்றைப்போல
மனத்தோடு ஒட்டும்-எழுத்தால்
நினைக்காதத் தளமும்தொட்டு
நீச்சலிடும் வெற்றிச்-சொக்கா

உனதுமுகம் கண்டதும்-இல்லை
உனதுகுரல் கேட்டதும்-இல்லை
தினமும்வரும் தினமொருகவிதை
தெளிவாகக் காட்டியதுன்னை

கனவுலகின் வாயிலைத்திறந்து
கவிதைகளில் நாளும்-விருந்து
மனதிலொரு மத்தளங்கொட்டி
மணக்கும்புது நாளும்-மலர்ந்து

எழுத்தோடு குடித்தனம்நடத்தும்
எனதருமை லவணா-நாகா
கழுத்தோடு கைகள்பூட்டி
கதைபேச இன்னொரு-வரவா

எழுத்தாளன் மணவாழ்வென்றால்
இனிப்புக்கு எல்லைகளில்லை
பழுத்தநல் கனிகள்போல
பழகுசுகம் வேறெவர்க்குண்டு

நேரிலே வருவார்சிலபேர்
நினைவுகளும் தூரமாய்நிற்கும்
நேரிலே வரும்வழியில்லை
நெஞ்சத்தால் வருவேனங்கே

தூரிகைப் பந்தமும்வெல்லும்
தூரங்கள் மனங்களுக்கில்லை
வாரியே இறைப்பேன்-பூக்கள்
வாழ்த்துக்கள் அள்ளிநிறைத்தே

இன்பத்தில் இனித்தேகிடந்து
துன்பத்தில் துணையாய்நின்று
உள்ளங்கள் பின்னிப்பிணையும்
உயிர்க்காதல் கொண்டேவாழ்க

கண்ணோடு இமையாய்க்கோர்த்து
கல்யாண உறவைப்போற்றி
விண்முட்டும் இன்பம்-சேர்த்து
வளமோடு நெடுநாள்வாழ்க

No comments: