மணிசார் மணநாள் வாழ்த்து


குதிச்சுக் குதிச்சுமனம்
குத்தாலந் தாவுது
வெதச்சத் தாலிக்கொடி
விண்ணேறிப் பாயுது

மதிச்சு மதிச்சுத்தான்
மணவாழ்வு கூடுது
நெனச்சி நெனச்சித்தான்
நெஞ்சுமணி பாடுது

வருசம் வளரத்தான்
உறவும் வளருது
புருசன் பொண்டாட்டிப்
பெருமை புரியுது

கருச மணியோடு
காதல்மணி உரசுது
புருச மணியோடு
பிரேமமணி ஒலிக்குது

நாப்பத் தஞ்சாகி
நல்வாழ்க்கை மிளிருது
மூப்புக் கண்ணோரம்
மெய்க்காதல் ஒளிருது

தோப்புக் குயிலிரண்டு
தோப்பாகிப் போனது
தோப்புக்குள் நாலு
தோப்பாகி வாழுது

கண்ணில் நீரானேன்
கனிந்த பாகானேன்
எண்ணம் நெய்யாக
எரியும் சுடரானேன்

இன்னும் பல்லாண்டு
இனியும் சிறப்போடு
வண்ணம் விண்ணாக
வாழ வாழ்த்துகிறேன்

No comments: