அன்பே
உன் விழிகளில் விளக்கேற்றி
என் இதய அறைக்குள்
வெளிச்சமிடு

சிறு இதழ்களில் பூப்பூத்து
என் எண்ணங்களை
மணக்க விடு

தினம் வெட்கப்பட்டு
வெட்கப்பட்டு
என் விழிகளுக்குள்
கனவுகளைத் தூவிவிடு

உன் மருதாணி விரல்களை
என் மேனியில் படரவிட்டு
என் உணர்வுகளைச்
சிவக்க விடு

உன் கருங்கூந்தல் மேகங்களை
என் மார்பினில் அலைய விட்டு
மழை பொழியச் செய்

உன் சந்தனப் பாதங்களின்
பிஞ்சு விரல்களால்
ஈர நிலத்தினில் கீறலிட்டு
என் பருவத்தை உன்னுடன்
இணைத்துக் கொள்ள
ஒரு கோலம் போடு

இவை அத்தனைக்கும் காணிக்கையாய்
இப்பிறவி மட்டுமின்றி
இனிவரும் அத்தனைப் பிறவியிலுமே
இன்றுபோலவே துடித்துக்கொண்டிருக்கப்போகும்
என் அத்தனை உயிர்களையும்
இன்றே இப்பொழுதே எழுதிக்கொடுத்துவிடுகிறேன்

No comments: