தமிழ்நிலா

(எழுத்துத் துறையில் சாதனைகள் படைக்கத் துடிக்கும் தமிழ்பெண்ணுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதை)


அஞ்சிலா பிஞ்சிலா
அன்னைமடி மஞ்சிலா
ஆரம்பம் ஆனதெப்போ
பிறப்பிலா - நாளும்
அமுதூறும் எழுத்தொன்றே
நெஞ்சிலா - தாகம்
அலைமோதத் தமிழோடு
கொஞ்சலா

கண்ணிலா கருத்திலா
கற்பனைப்பொற் சரத்திலா
கண்மூடிக் கூறுவாய்
பொன்னிலா - சஞ்சிகைக்
கனவுகளில் விழியிரண்டும்
ஊஞ்சலா - அந்தக்
கணம்தேடிப் பொழுதுக்கும்
ஏங்கலா

சொல்லிலா சுவையிலா
சுடர்வீசும் பொருளிலா
சுகமெதிலே சொல்லுவாய்
கவியிலா - பண்பைச்
சுரண்டாத முத்துப்பொன்
மொழியிலா - என்றும்
சுயநலமே நோக்காத
எழுத்திலா

விருப்பிலா பொறுப்பிலா
விரைவுபணி நெருப்பிலா
உயிர்க்கூடு பூப்பதெப்போ
கனவிலா - உந்தன்
விருப்பத்தைப் பொறுப்பாக்கும்
தரத்திலா - விரைவை
வெற்றிக்கு வேராக்கும்
சிறப்பிலா

அழகிலா அறிவிலா
அன்பெனும் பொழிவிலா
ஆசைமனப் பெருமையெது
நெஞ்சிலா - நீயும்
அத்தனையும் பெற்றுவிட்ட
நினைவிலா - அன்பை
அழகான அறிவாக்கிய
பண்பிலா

சொந்தமண் பாசமா
இந்தமண் வாசமா
எதிலுந்தன் கவனங்கள்
தமிழிலா - தமிழின்
யாதுமே ஊரென்ற
சிறப்பிலா - இருந்தும்
எந்தைதாய் முந்தையர்தம்
நிலத்திலா

பணியிலா படிப்பிலா
புத்தம்புது எழுத்திலா
பரவசம் கொண்டதெப்போ
வெண்ணிலா - இனியும்
பல்லாண்டு நடைபோடும்
தெளிவிலா - வெற்றிப்
பாதையை உருவாக்கும்
கனவிலா

குறைவிலா பேட்டியா
குரல்வழிக் கொஞ்சலா
குற்றாலச் சிரிப்போடு
குளியலா - என்னும்
காற்றலை வீச்சுகளில்
தனியுலா - இன்னும்
கட்டுரை கவிதைகளோ
கணக்கிலா

வளர்க்கவா வளைக்கவா
வாயாற வாழ்த்தவா
வாவென்று அழைத்ததேன்
சொல்நிலா - என்றன்
வாழ்த்துக்கு ஒளிருமே
கறுநிலா - அரங்கக்
கரவோசை கூட்டுமே
திருவிழா

மலர்விழா பொன்விழா
மாணிக்க மணிவிழா
மங்கைநீ காணவேண்டும்
முழுநிலா - குவியும்
மலர்மாலை பொன்னாடை
பெருவிழா - எழுத்தால்
மகுடங்கள் ஏந்திவா
தமிழ்நிலா

No comments: