கூவத்தில் கார்த்திகை தீபமா?


பிப்ரவரி 2008
இதை எழுதி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இன்று இதை வாசித்தால் கவிதை நயம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கவிதையின் தரம் சரியா என்ற கேள்வி எழுகிறது!

திமிர் ஒன்றே குணமாய்க்கொண்ட ஒரு பெண்மணி அநியாயத்துக்கு எல்லொரிடமும் வம்பு செய்தார். அது ஒருநாள் என்மீதும் பாய்ந்தது. நான் ஒரு சலாம் போட்டுவிட்டு விலகி வந்துவிட்டேன். ஒரு வார்த்தையும் அங்கே பேசவில்லை.

வந்தவன் இப்படி ஒரு கவிதையை எழுதிவிட்டு உறங்கிவிட்டேன். அதாவது அந்தக் கோபத்தை வெளியேற்றிவிட்டு நான் நானாக நிம்மதியடைந்துவிட்டேன். அதை வாசித்த என் மனைவி சொன்னாள் உங்கள் தரத்துக்கு இதுக்கெல்லாம் கவிதை எழுதலாமா என்று. அதை என் மனைவியைத் தவிர வேறு எவரிடமும் காட்டியதில்லை நான்.

அந்த கவிதையை இப்போது வாசிக்க நேர்ந்தது. அட அழிக்காமல் வைத்திருக்கிறேனே இன்னமும் என்று தோன்றியது. அதோடு ஏன் அழிக்க வேண்டும் அதுபாட்டுக்கு என் நாட்குறிப்பேட்டுக் கவிதையாக இருந்துவிட்டுப்போகட்டுமே என்று வலைப்பூவில் ஏற்றுகிறேன் :)


சுருக்குப் பைக்குள்
சூரியனை மறைக்கப்பார்க்கிறாள்
சூனியக் கிழவி
எங்கள் அலமேலு பாட்டி

குறைப்பது நாய்க்கழகு
கொத்துவது நாகத்திற்கழகு
குழைவது பொங்கலுக்கழகு
குணம் ஒன்றே பெண்ணுக்கழகு

எவ்வளவு ஊதினாலும்
பலூன் ராக்கெட்டாகிவிடாது
எவ்வளவு பெருத்தாலும்
பன்றி யானையாகிவிடாது

அழியாக் கவிதைகள் என் கைகளில்
அடுக்களைப் பருப்பு உன் கைகளில்
சபைக்கு வந்தால் எனக்குக் கிரீடம்
உனக்குச் சில்லறைதானே பாட்டி

பதவியில் இருந்தால் உனக்குப் பெயர்
பதவியே எனக்கு இன்னொரு பெயர்

நீயும் நானும் படைப்பாளிகள்தாம்
என் படைப்பு தங்குவது இதயத்தில்
உன் படைப்பு தங்குவதோ மலக்குடலில்

எனக்குச் சன்மானம் சரித்திரம்
உனக்குச் சன்மானம் ஏப்பம்

என்னால் இந்த உலத்தையே
உருட்டிப் பார்க்க முடியும்
உன்னால் லட்டுதானே பாட்டி
உருட்டிப் பார்க்க முடியும்

நீ ஊதி அணைக்க
நான் உன்வீட்டு சிம்ளியல்ல
என்றும் அணையாத சூரியன்

இன்றுதான் நான்
தரங்குறைந்துவிட்டேனோ
என்று சந்தேகப் படுகிறேன்
ஏன் தெரியுமா

உனக்கு நான் ஒரு
கவிதை எழுதலாமா

குட்டிச் சுவருக்குப்
பாலாபிசேகமா
கூவத்தில்
கார்த்திகை தீபமா

ஏப்ரல் 2001

No comments: