உளிதுறப்பது உயிர்துறப்பதல்லவா


முத்துவேண்டி
மூச்சுப் பிடிப்போம்

மாண்டுவிட்டாலும்
மரணமல்ல
அதுதான் வாழ்க்கை

மூச்சுப்பிடிக்க
திறமை திரட்டுவோம்

மூச்சுப் பிடிக்காமலேயே
முடங்கினால்
சுடுகாட்டு வெறுமையில்தான்
நாட்கள்

விரலை நீட்டாமல்
தீண்டுமின்பம் தோன்றுமா

வாழ்க்கை
கடும் பாறைதான் என்றாலும்
அதைச் செதுக்குவதில்
கிடைப்பதல்லவா இன்பம்

செதுக்கும்போது
சிலையை உடைத்துவிடா
கவனம் தேவைதானெனினும்
உளி துறப்பதென்பது
உயிர் துறப்பதல்லவா

No comments: