காதலர்தின வாழ்த்துக்கள்


வீதி வரப்புகளில்
சாலைச் சோலைகளில்
முற்றி முடியாத
சாயுங்காலங்களில்
நெஞ்சுநிறை
பிஞ்சுக் காதலர்கள்...

சிரித்துச் சிரித்து
செவ்வானம் பூத்தால்
பிழையா?

முத்தமிட்டு முத்தமிட்டு
முத்த இதழ் வெளுத்தால்
தப்பா?

பூக்கரம் வளைய
தேகவாசம் கமழ
கட்டியணைத்து
நரம்புநதி ஜதிபாடினால்
தவறா?

அதையும் தாண்டிய
அவசரச்
சரசமென்றால்தானென்ன
குற்றமா?

சுத்தக் கருநாடகமா
நாம் நாகரிகப் போலிகளா

ராக்கெட் வானில்
சிறகசைக்கும்
கணியுகக்
குறுந்தகடுகளல்லவா

உண்மைதான் காதலர்களே
காதலில் எதுவுமே
பிழையில்லைதான்
முறைப்பது பழைமை

தப்பில்லைதான்
தடுப்பது வயிற்றெரிச்சல்

தவறில்லைதான்
தூற்றுவது துரோகம்

குற்றமில்லைதான்
மறுப்பது காட்டுமிராண்டித்தனம்

ஆயினும்
ஒரு சிறு பொறி மின்னல்
கொளுத்த வருகிறேன்
உங்கள் எண்ணப் பேழையில்

அம்மா அப்பா
அக்கா அண்ண‌ன்
தங்கை தம்பி
நண்பர் உற‌வின‌ரிருக்க
எதைச் செய்வோமோ
அதைத்தானே
பொதுவிட‌ங்க‌ளில் செய்வோம்

சில்மிசச் சாகசங்களைத்
த‌னியிட‌ங்க‌ளிலல்லவா
வெளுத்து வாங்குவோம்

உங்களையே உங்களுக்கு
அறிமுகம் செய்கிறேன்
வேறேதும்
ஔவை மொழியில்லை
காதலர்தின வாழ்த்துக்கள்

No comments: