பிரித்துவைப்பவர்களின்
நோக்கமே அதுதான்

உறவுகளைவிட்டுத்
தூரமாக நம்மை
நிறுத்திவைத்துவிடுவார்கள்

அது நம்
உறவுகளின் உள்ளங்களை
அறியவிடாத அறியாமையை
வளர்க்கும்

அறியாமை
வளர்ந்து செழிக்கும்போது
வெறுப்புகளே
பழுத்துத் தொங்கும்

வெறுப்புகள் பழுத்தால்
வன்முறைதான்
நெருப்புக்கால்களெடுத்துக்
குத்தாட்டம் ஆடும்

இனங்கள்
ஒன்றை ஒன்று
தெரிந்துகொள்ளட்டும்
அத்தனை இனமும்
நல்லினங்கள்தாம்

மதங்கள் ஒன்றை ஒன்று
அறிந்துகொள்ளட்டும்
அத்தனை மதங்களும்
நல்மதங்கள்தாம்

இப்படியாய்
மொழி நிறம் நிலம்
எல்லாம் அறிதலில் நிறைந்து
அணைப்பினில் ஒளிரட்டும்

வன்முறை என்பது
மூடத்தனத்தின்
உச்சம்

No comments: