20160722

”உன்னுடையது உனக்கு என்னுடையது எனக்கு” என்றுதான் குர்-ஆனிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த மதம் இனம் மொழி எல்லாவற்றையும் மதிக்கச் சொல்கிறது.
ஆனால் நாத்திகம் என்ற பெயரில் வன்முறைச் சொற்களை அள்ளி இறைப்பதும் நக்கலடிப்பதும் தங்களைப் பெரிய மேதாவிகள் என்று காட்டிக்கொள்ளும் வறுமையின் காரணம்தான் என்று எனக்குத் தெரியும்.
ஆனாலும் அதை அனுமதிப்பது வன்முறையை வளர்த்தெடுப்பதே என்று உறுதியாக நம்புகின்றேன்.

*

>>>எப்ப்டிவேண்டுமானாலும் ஆடை அணிய உரிமை இருக்கிறதல்லவா?<<<
நிச்சயமாக உண்டு. எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அரசு அனுமதித்தால் ஆடை அணியாமலும் நடக்கலாம். அது அவரவர் விருப்பம் பண்பாடு கலாச்சாரம் வழக்கம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்.
ஆனால் தான் நிர்வாணமாக நடக்கிறோம் என்பதற்காக முழு ஆடை உடுத்தி இருப்பவர்களை வம்புக்கு இழுப்பது பெரும் தவறு.
ஒரு பெண்ணுக்கான பாதுகாப்பு அவளின் ஆடையிலும் இருக்கிறது என்பதை பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
அது இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதும் அறிந்த விசயம்தான்.
பட்டுக்கோட்டை ரோட்டில், கனடா வீதியில் செல்வதுபோல ஒட்டுத் துணியோடு நடக்க முடியாது. யாரும் தடுக்க மாட்டார்கள், ஆனால் கூட்டம் கூடி டிக்கட் போட்டு விற்றுக்கொண்டிருப்பார்கள்.
அப்படி நேரில் காணாத ஒருவன் அவள்மீது கைவைக்கக் கூடும். அல்லது அவன் கை வைக்காவிட்டாலும் அவன் மூளையை அவள் குடைந்துவிட்டுப் போய்விடக் கூடும்.
இப்படி ஆடை தரும் பண்பும் பாதிப்பும் அழகும் அட்டூலியமும் மிக அதிகம். நிறைய பேசலாம்.

>>>நான் இதுவிஷயத்தில் உங்கள் பக்கம்தான்!<<<

*

>>>கடவுளை மறுக்கிறேன் என வெளிபப்டையாக சொல்லுபவரே நாத்திகர்<<<
கடவுளை நேசிக்கிறேன் என்று உலகுக்குக் கூறிவிட்டு, உண்மையில் கடவுளை மறு மறுவென்று மறுத்து ஏதோ ஒரு மதத்தை அதில் உணர்வால் இருப்பவர்களைப் பயன்படுத்தி வக்கிரமாய் சதி செய்பவர்கள் யார்
கடவுள் மறுப்பாளர்கள் இல்லையா?
நாத்திகர்கள் இல்லையா?
பசுத்தோல் போர்த்திய புலி என்பார்களே அதெல்லாம் என்ன?
நான் திருமணமே ஆகாத பேச்சிலர் என்று சொல்லி ஒருவன் 10 பெண்களைப் பல ஊர்களில் திருமணம் செய்து ஏமாற்றி இருக்கிறான்.
அவன் திருமணம் ஆகாதவன் என்று சொன்னதைத்தான் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
உள்ளத்தில் கடவுள் மறுப்பு
உதட்டில் கடவுள் பக்தி
அவர்களை ஆத்திகர் என்பீர்களா நாத்திகர் என்பீர்களா?
இது என் ஒத்தைக் காசு கேள்விதான் நாத்திகர்களே!
பதில் சொல்லுங்கள்!

*

கடவுள் நம்பிக்கை இருந்தால்
கடவுளுக்கு பயப்படவேண்டும்!
கடவுளுக்குப் பயந்தால்
தப்பு செய்ய முடியாது!
அப்படி இருக்க கடவுளின் பெயரை அல்லது மதத்தின் பெயரைப் பயன்படுத்தி வன்முறை செய்பவர்களை ஏன் குற்றவாளிகளாய்ப் பார்க்காமல் மதக்காரர்களாய்ப் பார்க்கிறீர்கள்?
ஒழுங்கான உண்மையான பக்தர்களும் மதப்பிரியர்களும் அவர்கள் உண்டு அவர்கள் வழியுண்டு என்றுதானே செல்கிறார்கள்.
போலிகளை வைத்து ஏன் அசல்களைத் தாக்குகிறீர்கள்?
அவர்கள் எவ்வளவு அடித்தாலும் வாங்கிக்கொள்வார்கள் என்பதாலா?
அல்லது
போலிகள் சக்திவாய்ந்தவர்கள் அவர்களிடம் உங்கள் பாட்சா பலிக்காது என்பதாலா?

*

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அறம் அழுத்தமாகச் சொல்லித் தரப்படுகிறது.
அவர்கள் அதிலிருந்து பிறழ்வது இயலாது.
மாறினால் அப்போதே அவர் அந்த மார்க்கம்விட்டு வெளியேறிவிடுகிறார்.
கடவுளை மறுப்பவர் என்றாகிவிடுகிறார்.
மார்க்கம் என்பது பிறப்பு அடையாளம் அல்ல. அது வாழ்க்கை அடையாளம்.
ஒருவன் எப்படி வாழ்கிறான் என்பதே மார்க்கத்தின் அடையாளம்.
>>>.நீங்கள் தவறானவை என்று நினைக்கிற காரியங்கள் அவர்கள் ஒரு வகையில் சரி என்று நினைத்து<<<
சரி என்று அவர்களாகவே நினைக்க முடியாது.
மார்க்கமும், மார்க்க நூலும், மார்க்க அறிஞர்களும், நல்லவர்களாக வாழும் மக்களும் உதாரணங்களாகவும் சரியானதைச் சொல்லித்தருபவர்களாகவும் இருக்கும்போது இதற்கு வாய்ப்பே இல்லை

*

>>>நாத்திகர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும் சகோதர்களாகவும்,சகோதர்களாகவும், மனித நேயத்துடன் பார்க்கின்றனர்<<<
இதுதான் நாத்திகம் என்றால் நான் சிறந்த நாத்திகன் 
>>>ஆன்மிக வாதிகள் உலகத்தில் உள்ள அனைவரையும் சகோதர்களாகவும், சகோதர்களாகவும், மனித நேயத்துடன் பார்க்கின்றனர்<<<
இத்தான் ஆன்மிகம் என்றால் நான் சிறந்த ஆன்மிகவாதி 
ISIS RSS எல்லாம் ஆன்மிகவாதிகளா?
இல்லவே இல்லை. அவர்கள் மனிதர்களே இல்லை. பிறகு எப்படி ஆன்மிகவாதிகள் என்ற உயர் இடத்துக்கு வரமுடியும்.
இதைத்தான் நான் உங்களைப் போன்றவர்களிடம் சரியாக அடையாளப்படுத்த விரும்புகிறேன்.
அர்ஜுனனுக்கு அந்தப் பறவையின் கண்மட்டுமே தெரிந்தது குறிபார்க்கும்போது என்பார்கள். இல்லாவிட்டால் அவன் அம்பு இலக்குமாறிச் சென்றுவிடும்.
அதே போல பிழையானவர்களையும் குற்றவாளிகளையும் அறமற்றவர்களையும் அயோக்கியர்களையும் குறிபார்க்கும்போது அவர்களை மட்டுமே குறிபார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்களை வீழ்த்தமுடியும் (உலகமே ஒன்றுபட்டு)
அதைவிட்டுவிட்டு, உலகில் 99% உள்ள மார்க்கம், மதம் ஆன்மிகம் சார்ந்த நல்லவர்களைக் குறிவைத்தால், உங்கள் நோக்கம் எத்தனை அற்புதமானதாக இருந்தாலும் நீங்கள் தோற்றுப்போய்விடுவீர்கள்.

*
குற்றவாளியைக் குறிவைக்கும்போது அவனை விட்டுவிட்டு ஒரு பெரும் கூட்டத்தையே குறிவைத்தால், குற்றவாளி மிக வசதியாய் அதில் ஒளிந்துகொண்டு, மற்றவர்களைக் கேடயமாகவும் பயன்படுத்திக்கொள்வான். நீங்கள் தோற்றுத்தான் போவீர்கள்!

*
வெள்ளைப் புறாக்கள் உலகம் எங்கும் உலவட்டும்
அமைதி மண்ணில் நிரந்தரமாகச் செழிக்கட்டும்
மனிதன் மிருகம் கொன்று மனிதனாக மாறட்டும்
இறைவனின் பணி ஓய்ந்த நிறைவு ஒளிரட்டும்

*



No comments: