கவிதை அறுவடை 

எங்கோ இருந்தென்னை இழுக்கிறது
நெஞ்சில் ஏக்கத் தடம் வைத்து நடக்கிறது

வங்கம் துளியாய் அடர்கிறது
ஓர் வார்த்தை என்னை அழைக்கிறது

இதயம் கனமாய் இருக்கிறது
என் எண்ணம் புரண்டு படுக்கிறது

விழியின் வாசல் விரிகிறது
ஓர் அதிர்ச்சி என்னுள் அதிர்கிறது

தவிப்பின் நெற்றி சுடுகிறது
நரம்பின் வேர்வை உதிர்கிறது

தேடல் தேடித் திரிகிறது
ஓர் புள்ளியில் கோலம் அமர்கிறது

உயிரில் உழவு நடக்கிறது
உணர்வின் நாற்று விளைகிறது

அறிவின் வரப்பு அணைக்கிறது
ஓர் கவிதை அறுவடை ஆகிறது

1 comment:

cheena (சீனா) said...

கவிதை அறுவடை அருமை. உயிரும் உணர்வும் அறிவும் சேர்ந்தால் அழகு தமிழில் கவிதை மழை பொழியாதா