இன்னாத்துக்கு கூகூளு மின்குழுவா ஆவோணும் சாமி? இப்ப யாகூல இன்னா கொறஞ்சி போச்சாம்?


வருடம் 2004

கூகுள் மின் குழுமமாய் மாறுவதற்குமுன் நாம் என்ன செய்ய வேண்டும்?

முதலில், பலன்களையும் பாதகங்களையும் பரிசீலிக்க வேண்டும். நில் என்றால் நிற்காது மாற்றங்கள். பிற குழுமங்களும் மாறவேண்டும் என்று முடிவெடுக்கும் நாள் தூரத்தில் இருக்கமுடியாது.

பலரும், யுனிகோடில் எழுதி தங்கள் வலைப்பூவில் இட்டுவிட்டு பின் அதன் தகுதரத்தை மாற்றி திஸ்கியாக்கிக் குழுமத்தில் இடுகிறார்கள்.

மாலனின் திசைகள், மகேனின் எழில் நிலா, எனது அன்புடன் புகாரி போல, ஏராளமான இணையதளங்கள் துவங்குவதெல்லாம் யுனிகோடில்தான்.

நான் முதலில் திஸ்கியில்தான் என் வலைத்தளம் வைத்திருந்தேன். அதை யுனிகோடாய் மாற்றி வருடம் ஒன்றாகப் போகிறது.

எ-கலப்பை முன்பு திஸ்கி மட்டுமே எழுதும் நிரலியாக இருந்தது. அது பின் எ-கலப்பை 2.0 ஐ வெளியிட்டு வருடம் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

எ-கலப்பை 2 டினை நிறுவிவிட்டால், எந்த மாற்றமும் இல்லாமல் முன்புபோலவே தமிழில் தட்டெழுதலாம். தமிழ் எழுத Alt 1 க்குப் பதிலாக இப்போது Alt 2. அதாவது இரண்டுமே பயன்பாட்டில். திஸ்கியும்(Alt 1) எழுதலாம். யுனிகோடும்(Alt 2) எழுதலாம்.

யுனிகோடுக்கு எழுத்துரு-font தேவையில்லை. ஏனெனில் விண்டோசின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. ஆனால் அது யுனிகோடாக இருக்குமே தவிர, திஸ்கியாக இருக்காது.

திஸ்கியில் பயன்படுத்தியதுபோல, தகுதரத்தை-encoding, user defined ஆக்கத் தேவையில்லை. விண்டோசின் இயல்பிலேயே உள்ள UTF(8) போதும். ஆக நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. தானே தமிழ்த் தட்டச்சு செய்யலாம்.

அடுத்து, யாகூவைப்போல் கூகுள் குறைவான இடம் தருவதில்லை. GB கணக்கில் தருகிறது. எனவே மடல்களை வெட்டி ஒட்டி என்ற கதையெல்லாம் வேண்டாம். சும்மா பூந்து விளையாடலாம்.

இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.

கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.

அனைத்தையும்விட மிக மிக மிக முக்கியமான ஒரு விசயம்:
=========================================
=========================================

இரட்டைக் கோடுகளை இரண்டுமுறை பயன்படுத்தி இதனை அடிக்கோடிடுகிறேன். ஏன் தெரியுமா?

தமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது மாங்குமாங்கென்று நாம் இணைய குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால் எதுவும் தேடினால் கிடைப்பதில்லை.

யூனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச்சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும்.

அதாவது உலகலாவி விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தப்போல தேடியதும் தட்டுப்பட்டுவிடும்.

இது தமிழுக்கும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களுக்கும் மிக மிக அவசியம்.

உதாரணமாக, "புகாரி" என்றோ "அன்புடன் புகாரி" என்றோ "வெளிச்ச அழைப்புகள்" என்றோ யுனிகோடில் கூகுளில் தட்டி தேடு பொத்தானை அமுக்கிப் பாருங்கள், நிறைய வாசிக்கக் கிடைக்கும் - என் பெயரிலேயே கூட இப்படி என்றால், உங்கள் பெயரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

இவையோடு, கூகுளில் உள்ள மடல்களை, ஒரு வார்த்தை தந்து தேடச்செய்யலாம். எப்போ என்ன மடல் என்றெல்லாம் கண்வலிக்கத் தேடவேண்டாம். கூகுளே தேடித்தரும்

போன வருடம் கவிஞர் சேவியர் தன் தொலைபேசி எண்ணை, நம் குழுமத்தில் இட்டாரே என்ற நினைவு வந்த அடுத்த கணம், அவர் தொலைபேசி என்னைப் பிடித்துவிடலாம். Mail search not by subject line but content.

இன்னும் இவைபோல ஏராளம். என் நினைவில் உள்ளவற்றையும் நான் அறிந்தவற்றையுமே இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.

அடுத்து, பிரச்சினைகள் என்ன?

விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000 வைத்திருப்பவர்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. ஆனால் அதற்கு முன்னுள்ள விண்டோக்களில் மைக்ரோசாஃப்ட் தரும் ஒரு கோப்பினை நிறுவிக்கொள்ள வேண்டும் தகவல்கள் எழில்நிலாவில் ஏராளம்.

ஜிமெயில் வைத்திருப்பவர்களுக்கு யுனிகோடு தண்ணிபட்டபாடு. ஆனால், அவுட்லுக், ஹாட்மெயில், யாகூமெயில் என்று அனைத்திலும் யுனிகோடு பாவிக்கலாம்.

ஜிமெயில் அழைப்பு தருவதற்கு நான் தயார் நிலையில் இருக்கிறேன். ஒரு மடல் anbudanbuhari@gmail.com க்கு அனுப்பினால் போதும் அடுத்த நிமிடம் அழைப்பு உஙகள் மின்னஞ்சல் சாளரம் தட்டும்

அடுத்து,

இப்போது ஓடிக்கொண்டிருக்கும் குழுமத்தைக் கலைப்பானேன். தேன்கூட்டைல் கலைப்பதுபோலல்லவா அது. இது என்ன பேஜாரு சாமியோய்! வீணா உறுப்பினர்களுக்கெல்லாம் தொல்லை தருவாங்களா இப்படி? என்று அங்கலாய்க்கவேண்டாம்.

அனைவரின், அஞ்சல் முகவரிகளையும் அப்படியே அங்கே நகர்த்த வேண்டியதுதான். மிகச் சுலபம். எந்த சிரமமும் இல்லை.

தமிழை கணினிக்கு எடுத்துவந்தவர்கள் தமிழர்.
என்றும் முன்னேற்றம் விரும்புபவர்களே தமிழர்.
பனை ஓலைக்கா நாம் அவர்களை அழைக்கிறோம்.
புதிய தொழில் நுட்பத்திற்கே அழைக்கிறோம்.
அனைவரும் ஆவலுடன் வருவார்கள்.

இதுவரை சேமித்த பொக்கிசங்களெல்லாம் பாழா? அநியாயமா இருக்கே இதென்ன அரவேக்காட்டுத்தனம் என்று கூவவேண்டாம் யாரும்.... ஏன்?

ராயர் காப்பி கிளப் என்ற குழுமம் இப்போது இரண்டாவது தளத்தில்தான் இயங்குகிறது. முதல் தளம் இடப்பற்றாக்குறையால் நின்றுவிடவே. அப்படியே இன்னொன்றைத் துவங்கி உறுப்பினர்களை நகர்த்திக்கொண்டார்கள்.

அதோடு பழைய குழுமத்தை அப்படியே வைத்திருக்கிறார்கள். அதன் சரித்திரம் பாதுகாப்பாகவே இருக்கிறது.

அதுமட்டுமல்ல, கூகுள் தருவது கிகாபைட்டுகள் என்பதால், இங்கொரு பிரதியும், அப்படியே அங்கொரு பிரதியும் வைத்துக்கொள்ளலாம். மடல்களை அப்படியே பிரதியெடுத்து புதியதளம் நகர்த்த, திரு. முகுந்த் போன்ற தமிழர்கள், நிரலி எழுதி அசத்தி இருக்கிறார்கள்.

அன்பு உறுப்பினார்களே, உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், குழப்பங்கள் என்று அனைத்தையும் அறிவியுங்கள். பரிசீலிப்போம். ஏற்புடையதை ஏற்போம்.

நன்றி

அன்புடன் புகாரி

No comments: