செம்மொழியாம் தமிழ்மொழி 2004 செப்டம்பர் 17


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு கொடுத்தது ஜனநாயகமற்ற செயல் என்று அனந்த மூர்த்தி என்ற கன்னட எழுத்தாளர் கூறினார். அதைக் கண்டித்து நான் எழுதிய ஒரு கட்டுரை இது.

இதற்குப் பெயர்தான் மொழி வெறி என்பது. தமிழன் தமிழ்மீது பற்றுவைத்தால் மொழிவெறியன் என்றுவிடுகிறார்கள் அவசரப்பட்டு.

தன் மொழிமீது வைத்திருக்கும் காதல் என்பது பற்று. அடுத்த மொழியை அழிக்க எண்ணும் எண்ணம் மொழிவெறி

இதுவேதான் மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் உண்டான வித்தியாசம். ஒரு மதத்தின் மீது ஒருவன் உயிரையே வைத்திருக்கலாம். அதில் ஒரு பிழையும் இல்லை. அடுத்த மதத்தை இழித்துப் பேசி அதை அழிக்க முற்படும்போதுதான் மதவெறி வருகிறது.

அனந்த மூர்த்தி எந்த இலக்கியக் காரணத்தையும் சொல்லாமல் அரசியல் காரணம் சொல்லி தமிழ் மொழி மீது சேறு இறைக்கிறார்.

இதற்குக் காரணம், தன் மொழி செம்மொழி என்று அறிவிக்கப்பட வாய்ப்புகள் இல்லாத போது எப்படி அதை செம்மொழியாக்கலாம் என்ற குறுக்குப் புத்தியால் வந்த வெறி.

எல்லாத் தகுதிகளோடும் முழுமையடைந்த பெண்ணாய் என்றோ தமிழ் வளர்ந்துவிட்டது. அதற்கு இன்றுதான் பெண் என்ற அங்கீகாரத்தையே அரசு செய்திருக்கிறது. இதுவே மிகப்பெறும் தவறு. என்றோ பெண்ணானவளை இன்று பெண்ணென்று அங்கீகரித்ததற்காக அரசு இப்போதே தலைகுனிந்து நிற்கிறது.

நேற்றுப் பிறந்து ஜட்டியும் போடாத கன்னடம் (மன்னிக்கவும் கோபம் வரத்தான் செய்கிறது) பட்டத்தரசி என்று பட்டம் சூட்ட ங்கா ங்கா என்று கத்துகிறது.

தகுதி வரும்போது, தானே நிகழும் ஒரு காரியத்தை, தகுதிக்கு மீறி ஆசைப்படும் பேராசைக்குப் பெயர்தான் வெறி.

ஏன் செம்மொழித் தகுதியைத் தமிழுக்குத் தரக்கூடாது என்று பட்டியல் போட்டிருந்தால் இவர் எழுத்தாளர். இப்போது இவர் ஒரு கத்துக்குட்டி என்றே தோன்றுகிறது.

ஞானபீட பரிசு பெற்றால், ஞானமின்றி ஏதோ சொல்லுவோம் என்பது எழுத்தாளர்களுக்கு என்ன விதியோ தெரியவில்லை. மேடை ஏறி எதையோ குரைத்து விடுகிறார்கள். மன்னிக்கவும் சொல்லி விடுகிறார்கள் :)

ஞானபீட விழாக் கொண்டாட்டங்களில் அரசியல் நுழைந்து இவர்களை இப்படிப் பேச முடுக்கிவிட்டிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

செம்மொழி என்பது என்ன?

எழுத்தாளர் சுஜாதா:

Classical Language - செம்மொழி என்று மேல்நாட்டினர் கருதுவது, புராதன கிரேக்க, லத்தீன் மொழிகளை மட்டுமே. இதனுடன் ஒருசிலர் சமஸ்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற மொழிகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். தமிழும் இவ்வரிசையில் செம்மொழிதான் என்பதில் சிகாகோ, பர்க்லி, பென்சில்வேனியா போன்ற பல்கலைக் கழகங்களுக்கும், விசயம் தெரிந்தவர்களுக்கும் எள்ளளவும் சந்தேகமிலை.

பெரும்பாலும் இந்தியத் துணைக் கண்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் இம்மொழியின் பழமையை உணர்த்த வேண்டி இருக்கிறது.

ஒரு மொழியை செம்மொழி என்பதற்கு என்ன தகுதி வேண்டும்?

குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டாவது பழசாக இருக்க வேண்டும். இங்கிலிஷ், இந்தி எல்லாம் அடிபட்டுப்போய்விடும்.

கலாச்சார இலக்கியத் தொடர்ச்சி இருக்க வேண்டும். தமிழுக்கு கூடுதல் சிறப்பு - இரண்டாயிரம் ஆண்டு பழமையான நம் இலக்கியத்தின் சில வரிகள் இன்றைய அன்றாடத் தமிழிலும் அரசியல் மேடைகளிலும், சினிமாப் பாடல்களிலும் ஒலிக்கும் அளவுக்கு தொடர்ச்சி இருப்பது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன், இன்றைய தமிழனோடு பேசினால் ஓரளவு புரியும். உலகின் மற்ற மொழிகளுக்கு இந்தத் தகுதி இல்லை என்பதால் தமிழைச் சிறந்தமொழி என்பேன். (செம்மொழித் தகுதி தமிழுக்கே அழுத்தமாக உண்டு என்கிறார் சுஜாதா)

*

முனைவர் சி.எம். சிங்காரவேலன்:

உலகின் தொன்மையான மொழிகள் ஐந்து. அவை தமிழ், வடமொழி, எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் என்பன.

அவற்றுள் இன்றும் வாழும் மொழி தமிழ்.

தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழி என்று வரையறுத்துக் கூறியவர் அறிஞர் கால்டுவெல்.

உலகமொழிகளின் தாய் தமிழ்மொழி. தமிழின் வேர்கள் சொற்கள் இலக்கண அமைதிகள் நேற்றய திருத்திய மொழிகளிலும் திருந்தா மொழிகளிலும் காணப்படுகின்றன.

உலகெங்கிலும் பரவியுள்ள அனைத்து மொழிகளுலும் தமிழின் வேர் சாயல் சொற்கள் காணப்படுகின்றன. தமிழ் இலக்கண இலக்கிய செழுமை நிறைந்தது.

உலகின் அனைத்துச் சமய நூல்களும் இலக்கியங்களும் உள்ள ஒரே மொழி தமிழே.

*

கு. புகழேந்தி, பொதுச் செயலாளர் மைசூர்த் தமிழ்ச் சங்கம்:

மைசூர் நகரத்தில் மத்திய அரசின் நிறுவனங்கள் பல உள்ளன. மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம், ராணுவ உணவு சோதனைக் கழகம், பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தின் ஒரு பிரிவு, கரன்சி நோட்டு அச்சகம், அகில இந்திய செவிடு ஊமை நிவர்த்திக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. இவைகளைப் போன்றே மிக முக்கியமான ஒரு நிறுவனம் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் - Central Institute of Indian Languages

மத்திய அரசு தமிழை செம்மொழியென அறிவிக்கத் தகுந்த ஆவணங்களைப் பெறவும் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தைத்தான் அணுகியது. இந்தியாவில் 1652 மொழிகள் இருக்கின்றன. ஆட்சி மொழிகள் பதினெட்டுதான் என பட்டியலிருகிறது இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்.

*

கவிப்பேரரசு பத்மஸ்ரீ வைரமுத்து:


ஒருமொழி செம்மொழி என்ற சிம்மாசனம் பெறுவதற்கு பல்வேறு தகுதிகள் வேண்டும்.

அது தொன்மையுடையதாய் இருக்க வேண்டும். சில மொழிகளைத் தோற்றுவித்த தாய்த்தன்மை கொண்டிருக்க வேண்டும். பிறமொழித் தாக்கம் இல்லாத் தனித்தன்மை கொண்டிருக்க வேண்டும். இலக்கிய செப்பமும் இலக்கிய நுட்பமும் இணைந்திருக்க வேண்டும். உலகக் கருத்துலகத்திற்குக் கொடை கொடுத்திருக்க வேண்டும். உலக ஏற்கும் பொதுமைப் பண்பு அமைந்திருத்தல் வேண்டும்.

செம்மொழிக்கென்று எத்தனைத் தகுதிகள் சொல்லப் பட்டிருக்கின்றனவோ அத்தனைத் தகுதிகளும் கொண்டது தமிழ்.

தமிழுக்கு இரண்டாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சொல்லப்போனால், இந்திய அரசாங்கத்தால் அமைச்சரவை கூட்டி அங்கீகரிக்கப்பட முதல் செம்மொழி தமிழ்தான். இதுவரைக்கும் செம்மொழி என்ற கருத்துவுவாக்கமே மத்திய அரசாங்கத்தில் இல்லை.

சில மொழிகளின் பழைமையும் பெருமையையும் கருதி சம்பிரதாயமாக அவைகள் செம்மொழிகள் என்று மதிக்கப்பட்டனவே தவிர அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அராங்கம் 1850 முதல் சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, பாரசீகம், அரபி ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு Fellowship விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வந்ததுண்டே தவிர அவற்றைச் செமொமொழிகள் என்று கொண்டதற்கு ஆதாரங்கள் இல்லை.

தமிழ் செம்மொழி ஆகவேண்டும் என்ற புயல் மையம் கொண்ட பிறகுதான் கரைகளின் நீள அகலமே தீர்மானிக்கப்படுகின்றது

எது செம்மொழி. செம்மொழிக்கான தகுதிகள் யாவை என்று வரைவிலக்கணம் இப்போதுதான் வகுக்கப்பட்டிருக்கிறது.

1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையும் சில மொழிகளைத் தோற்றுவித்த தாய்த் தன்மையும் பிறமொழித் துணையின்றி தனித்து நிற்கும் வேர்த்திறமும் கொழித்துச் செழித்த இலக்கண இலக்கிய வளமும் கொண்டிருக்கும் மொழி எதுவோ அதுவே செம்மொழி.

1000 ஆண்டுகள் என்ற வரைவெல்லையை 2000 ஆண்டு என்று மாற்றியமைத்தால் தமிழின் தனித்தும் இன்னும் அதிகமாய் உணரப்படும் என்பது உண்மையே.

இந்த இலக்கணப்படி இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்.

எனவே செம்மொழி என்று தங்களைக் கருதிக்கொண்டிருக்கும் மொழிகள் இனிமேல் தமிழோடு வந்து ஒட்டிக்கொள்ளலாமே தவிர, தமிழ் சென்று அறிவிக்கப்படாத பட்டியலில் அமர வேண்டியதில்லை.

பூவில் ஓடிவந்து வண்டுகள் ஒட்டிக்கொள்ளட்டும்; வண்டுகளின் காலடியில் பூக்கள் ஓடிப்போய் ஒட்டிக்கொள்வதில்லை.

கனவு பலித்திருக்கும் காலகட்டத்தில் கனவுகண்டவர்கள் மீது கண்டவர்களும் கல்லெறிய வேண்டாம்.

சில சட்ட சிக்கல்களுக்காக, அரசாணைகள் வளைந்தும் நெளிந்தும் பேசலாம்.

ஆனால் பாத்திரம் வளைந்திருந்தால் தேனின் ருசியுமா வளையும்?

தமிழ் செம்மொழி என்பது நூற்றாண்டு நோற்றுப் பெற்ற வரம். வாராதுபோல் வந்த மாமணியைத் தோற்போமா?

இனிமேல் தமிழர்கள் பொங்கல் புத்தாண்டைப் போல் செம்மொழித் திருநாள் கொண்டாட வேண்டும்

*

தமிழ் செம்மொழியான நாளை குழுமங்கள் விமரிசையாய்க் கொண்டாடுதல் வேண்டும். இந்திய நடுவண் அரசால் 2004 செப்டம்பர் மாதம் 17ம் தேதி தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாம் ஆண்டில் நுழைந்து அழகாய்ச் சிரிக்கும் தமிழுக்கு நாம் நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

விற்பனர்க்கும் அற்புதமே
முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறை கற்றறிவே
நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணை பெற்றுயர
பற்றுகிறேன் நற்றமிழே

அன்புடன் புகாரி

3 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

மிகவும் அருமையான செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளீர்கள்.

தமிழ் எல்லா மொழிக்கு கொடை கொடுத்ததே அன்றி.. கொலை செய்யப் பார்த்ததில்லை.

ஆனால், தமிழினிடத்தில் பிச்சைப் பெற்ற மொழிகளும் அந்த மொழிக்காரர்களும்தான் தமிழுக்குப் பச்சைத் துரோகம் செய்கின்றனர்.

தமிழ்ச் செம்மொழி பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன். காண்க.

http://thirutamil.blogspot.com/2009/09/1792009.html

நா. கணேசன் said...

அருமையான கட்டுரை!

நா. கணேசன்

Unknown said...

சுப. நற்குணன் வலைப்பூ அருமை. உங்கள் பாராட்டுக்கு நன்றி.

தமிழென்றால் நா. கணேசன் வந்துவிடுவார். என் இனிய நண்பர் முனைவருக்கு நன்றி

அன்புடன் புகாரி