6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னணி ஏதாவது இருக்கிறதா?


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


அது என் பாட்டி வைத்த பெயர். கனடா வானொலி நேர்காணல்களிலும், தொலைபேசி வழியாகவும், நேரிலும் பலர் ஆர்வமாக இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழாவில்தான் நான் அந்தக் கதையைச் சொன்னேன். அங்கே எதைச் சொன்னேனோ அதையே இங்கேயும் சொல்கிறேன்.

பலரும் தான் ஒரு கவிஞனானதற்கு ஒரு பெண்தான் காரணம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். "நான் கவிஞனென்றால் அதெல்லாம் அந்த அழகியின் முகம் பார்த்து" என்றும் "அவள் கவிஞனாக்கினால் என்னை" என்றும் பல திரையிசைப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள். நான் கவிஞனானதும் ஒரு பெண்ணால்தான். அது வேறு யாருமல்ல என் பாட்டிதான்.

நன்றாக ரசித்து கதை சொல்லத் தெரிந்த பாட்டி கிடைக்கப்பெற்றவர்களெல்லாம் நிச்சயம் கவிஞனாகிவிடுவார்கள் :)

என் பாட்டி லயித்துச் சொன்ன பச்சைமிளகாய் இளவரசி கதையின் தலைப்புதான் முழுமையாய் என் ஞாபகத்தில் இருக்கிறதே தவிர வேறெதுவும் தெளிவாய் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

முன்பொரு காலத்தில், பச்சைமிளகாய்புரி பச்சைமிளகாய்புரி என்று ஒரு நாடு இருந்ததாம். அதை அழகான ஓர் அரசன் ஆண்டுவந்தானாம். அவன் ஓர் அழகான பெண்ணப் பார்த்து காதலில் விழுந்தானாம், அவளையே மணமும் முடித்தானாம். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லையாம். இப்படியோர் அன்பான கணவனுக்குத் தனனால் ஒரு பிள்ளையைப் பெற்றுத்தர இயலவில்லையே என்ற
கவலையிலேயே மனம் உடைந்து அவள் இறந்துவிட்டாளாம். கதறி அழுத அரசன் அவளை ஓர் அழகிய தோட்டத்தில் புதைத்துவிட்டு தினமும் அவள் சமாதியின் முன்னமர்ந்து கண்ணீர் விடுவானாம். சில தினங்களில் அவள் சமாதியின் மீது ஓர் அழகான பச்சைமிளகாய்ச் செடி முளைத்ததாம். அதில் மிக வசீகரமாகவும் பெரிதாகவும் ஒரே ஒரு பச்சைமிளகாயும் முளைத்ததாம். அது வளர்ந்து வளர்ந்து பத்துமாதங்கள் கழிந்ததும், பட்டென்று வெடிக்க
ஓர் இளவரசி அதிலிருந்து வெளிவந்தாளாம்.

அவளோ அழகென்றால் அழகு அப்படி ஓர் அழகாம். சூரியனைவிட வெளிச்சமாக நிலவை விட குளிர்ச்சியாக மலரைவிட மென்மையாக என்று பாட்டி சொல்லச் சொல்ல அந்தப் பேரழகியின் அழகு என் அடிமனதில் அப்படியே சென்று தங்கிவிட்டது.

அந்தப் பச்சைமிளகாய் இளவரசியை என்றோ என் வாழ்வில் ஒருநாள் சந்திப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு மெல்ல மெல்ல அவளை மறந்தும்போய் விட்டேன். நாட்கள் உருண்டோடின. எனக்குத் திருமணமும் ஆனது. ஆனால் என் பச்சைமிளகாய் இளவரசியைப் பார்க்கவே இல்லை. ஆனால், என் திருமணமான பத்தாவது மாதம் எனக்கே பிறந்தாள் அந்தப் பச்சைமிளகாய் இளவரசி.

என் மகளுக்காக நான் சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று இந்தத் தொகுப்பிலும் உள்ளது. அந்தக் கவிதையின் பெயர்தான் பச்சைமிளாய் இளவரசி.

நகைச்சுவை உணர்வுகளோடுதான் நான் இந்தத் தலைப்பை என் நான்காவது கவிதை நூலுக்கு வைத்தேன். பலராலும் அது பாராட்டப்படுவது மகிழ்வினைத் தருகிறது.

No comments: