நாளை மறுநாள் நீ மடியப்போகும் நாள்

(ஒரு நிலநடுக்கம் கொத்துக்கொத்தாய் மக்களை அள்ளி விழுங்கியதைக் கண்டதும் வந்த சிந்தனைகள்தாம் இந்தக் கவிதை)


தனக்குள் தானே
குழிதோண்டிக்கொண்டு
கொத்துக் கொத்தாக
உயிர்களைப் புதைத்து
வெட்டியான் வேலையையும்
சிரத்தையாய்ச் செய்து முடித்தது
பூமி

அந்த நிமிடம்...

ஒரு மழலை
தன் முதல் அழுகையை
உலகுக்கு வெளியிட்டுக்
கொண்டிருந்திருக்கலாம்

ஒரு முதுமை
கண்விழிப்போமா என்ற
நிச்சயமின்மையில்
உறங்கிக்
கொண்டிருந்திருக்கலாம்

ஓர் இளமை
காதலியின் பனிமடியில்
உயிர் மறந்து
மயங்கிக்
கொண்டிருந்திருக்கலாம்

ஒரு நடுத்தரம்
பிழிந்தெடுக்கும்
பிரிவுத் துயரால்
பரிதவித்துக்
கொண்டிருந்திருக்கலாம்

ஒரு கைதி
தலைமறைவாய்
குகையொன்றில்
வெந்து
கொண்டிருந்திருக்கலாம்

ஒரு துரோகி
நாடுகளை ஏப்பம்விட
திட்டம்தீட்டிக்
கொண்டிருந்திருக்கலாம்

பணம் இனம் மொழி மதம்
நாடு நிலம் வீடு விருப்பம்
இன்னபிற காரணங்களால்
மனிதர்களை மனிதர்களே
மென்று தின்னும் மரண விருந்துகள்
நீக்கமற நிறைந்து எங்கும்
நடந்து
கொண்டிருந்திருக்கலாம்

நாளை மறுநாள் நீ
மடியப்போகும் நாளென்று
இன்றே அறிவித்துவிட்டால்
சாவு பயம் பிடித்தே
மனிதன் செத்துப்போவானோ
அல்லது
இன்றைக்குச் சாவில்லை என்றே
இன்னும் ஆட்டம் காட்டுவானோ

நெற்றிப் பத்திரத்தில்
மர்மமாய்க் குத்தப்பட்டிருக்கும்
மரண முத்திரையை
அறிந்தவனுக்கு அப்போதுதான் சாவு
அறியாதவனுக்கோ எப்போதும் சாவு

மறுநொடி மரணம் என்றால்
பயத்தைவிடுத்து வேறு
எதையெல்லாம் செய்வீர்களோ
அதையெல்லாம்
வாழும் அத்தனை நொடிகளிலும்
செய்யுங்கள் மனிதர்களே

சாவுக்குச் சொந்தமான உங்களை
வாழ்வுக்குச் சொந்தமாக்கிக்
கொள்ளுங்கள்

2 comments:

அகல்விளக்கு said...

ஃஃசாவுக்குச் சொந்தமான உங்களை
வாழ்வுக்குச் சொந்தமாக்கிக்
கொள்ளுங்கள்ஃஃ

நிதர்சனம் நண்பரே...
அருமையான கவிதை

பூங்குழலி said...

நாளை மறுநாள் நீ
மடியப்போகும் நாளென்று
இன்றே அறிவித்துவிட்டால்
சாவு பயம் பிடித்தே
மனிதன் செத்துப்போவானோ
அல்லது
இன்றைக்குச் சாவில்லை என்றே
இன்னும் ஆட்டம் காட்டுவானோ

நிறைய பேர் பயத்தில் செத்துப் போவார்கள்

மறுநொடி மரணம் என்றால்
பயத்தைவிடுத்து வேறு
எதையெல்லாம் செய்வீர்களோ
அதையெல்லாம்
வாழும் அத்தனை நொடிகளிலும்
செய்யுங்கள் மனிதர்களே

நன்றாக சொன்னீர்கள் புகாரி ..