013


தமிழ்க் கனடா - குளிர் குளிர் குளிர்

தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறார்கள். கனடாவுக்கு மிக அதிகமாக வந்து குடியேறியிருக்கும் தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த நிலையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களைச் சொல்லலாம். அதன் பின்னர்தான் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சொல்லவேண்டும்.

இலங்கையில் பெரும்பாலும் வெப்பம் 37 பாகை செல்சியசைத் தாண்டுவதில்லை, குளிர் 22 செல்சியசுக்குக் கீழே செல்வதில்லை தமிழ் நாட்டில் அது 40 வரை உயரும் 20 வரை தாழும். ஆக இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் தட்பவெட்பத்தில் அதிக வித்தியாசம் இல்லை.

ஆகவே தமிழர்கள் அரைக்கை சட்டையும் வேட்டியுமாகவே பெரும்பாலும் நகர்வலம் வருவார்கள். பெண்கள் இடைப்பகுதியைத் திறந்து வைத்து சேலை உடுத்துவார்கள்.

சட்டை இல்லாமல் வயல்வெளிகளில் வேலை செய்வதும் ஒரு கோவணத்தோடு மட்டுமே உலாவருவதும் கிராமங்களில் மிகச் சாதாரணமாக நடக்கும் விவசாய விசயங்கள். ஆனால் கனடா அப்படியா?

கனடா உலகில் மிக அதிக குளிர் கொண்ட முதல் மூன்று நாடுகளுள் ஒன்று. கனடாவின் குளிரைப் பற்றி எழுதினால், நீங்கள் கம்பளியைப் போத்திக்கொண்டு வாசித்தாலும் உயிர் உறைந்துபோகும். அத்தனைக் குளிர்.

கனடாவில் யூகான் பிரதேசத்தில் உள்ள ஸ்னாக் (Snag) விமான நிலையத்தில் மிக அதிகமான குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுகின்ற மூச்சுக் காற்றே கண்ணை மறைக்கும் பனிமூட்டத்தை உருவாக்கும் குளிர். தண்ணீரை அள்ளி வீசினால் அது தரையைத் தொடும்முன்னர் அப்படியே உறைந்து பனிப்பூக்களாய் மாறும். தொலை தூரத்தில் பறக்கும் விமானம் நம் காதுக்குள் பறப்பதைப் போல சத்தம் கேட்கும்.

ரஸ்யா, கிரீன்லாண்ட், கனடா இந்த மூன்று நாடுகளும்தான் உலகில் மிக அதிக குளிர் கொண்ட நாடுகள். இந்த மூன்று நாடுகளின் குளிரைவிட மிக மிக அதிக குளிர் உள்ள ஓர் இடம் உலகில் உண்டு. அதுதான் அண்டார்டிகா. பூமியின் தென் துருவம் இதுதான். ரஸ்யா, கிரீன்லாண்ட், கனடா ஆகிய மூன்று நாடுகளும் பூமியின் வட துருவத்தில் உள்ளன.


வடதுருவத்தைவிட தென்துருவமே மிக அதிக குளிர் கொண்ட பகுதி. அண்டார்டிகாவில் ஓஸ்டாக் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட்ட குளிர் -89.2 செல்சியஸ். இது மேலும் -91 செல்சியஸ் செல்வதாக வாய்வழி தகவல்களும் உண்டு. அண்டார்டிகா ஒரு கண்டம் மட்டுமே. இங்கே நாடுகளோ மக்களோ கிடையாது என்பதால் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்வக்கூடாது.

ரஸ்யாவின் வெர்கொயன்ஸ் என்னும் இடத்தில் -68 செல்சியஸ், கிரீன்லாண்டின் நார்த் ஐஸ் என்னும் இடத்தில் -66 செல்சியஸ், கனடாவின் ஸ்னாக் என்னும் இடத்தில் -63 செல்சியசும் மிக அதிக குளிர் அளவுகள் பதிவுசெய்யப்பட்டுளன. இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவின் அலாஸ்காவில் -62 செல்சியஸ் பதிவாகி இருக்கிறது.

தமிழ் நாட்டின் மலையரசியான ஊட்டியில்கூட குளிர் 4 செல்சியசுக்குக் கீழே செல்வதில்லை.

கனடாவில் ஸ்னாக் என்னும் இடத்தில் -63 செல்சியஸ் குளிர் இருந்தாலும் கனடா முழுவதும் அப்படியல்ல. தமிழர்கள் அதிகமாக வாழும் டொராண்டோவில் குளிர் -32 செல்சியஸ்வரை செல்லக்கூடும் என்றாலும் அதெல்லாம் அபூர்வம்.

ஒண்டாரியோ ஏரி டொராண்டோவின் வெப்ப நிலையை மிதமாக வைத்திருப்பதால் குளிர்காலத்தில் டொராண்டோவின் குறைந்த குளிர் அளவு பெரும்பாலும் -10 லிருந்து -20 செல்சியசுக்குள் இருக்கும்.

ஆயினும் நம்மூரிலிருந்து நேரே இங்கே டொராண்டோவில் குளிர் காலத்தில் வந்து இறங்கினால் குளிர் அதிர்ச்சி தருவதாகவே இருக்கும். ஆகையால்தான் முதலில் கனடா வருபவர்கள் கோடைகாலத்தில் வரவேண்டும். பிறகு மெதுவாகக் குளிருக்குப் பழகிக்கொள்ளலாம்.


நான் 1999 ஜூலை மாதத்தில் குடும்பத்தோடு டொராண்டோவில் வந்து இறங்கினேன். அப்போது வெப்பம் சராசரியாக 35 செல்சியஸ் இருந்தது. அக்டோபர் தொடங்கி குளிர் தன் முகத்தை என் முகத்தில் வைத்து மெல்ல மெல்ல முத்தமிடத் தொடங்கியது.

இந்தக் குளிரை முதலில் சந்தித்த என் உணர்வுகளை அறியும் எண்ணம் உங்களுக்கு உண்டா? இதோ டொராண்டோவின் குளிரில் நடுங்கிக்கொண்டே நான் எழுதிய கவிதை.

குளிர் குளிர் குளிர்

ஆடை துளைத்து
தோல் துளைத்து
தசைகள் துளைத்து
இரத்த நாளங்கள் துளைத்து
இருதயம் துளைத்து
உயிர் துளைத்து
இதோ உள்ளே ஊசிகளாய்
உறைய வந்துவிட்டது
அந்தக் கனடியக் குளிர்

ஓ தீக்குழம்பே
நீதான் எத்தனைச்
சுகமாகிப் போனாய் இப்போது

உன்னையே ஆடையாய் நெய்து
நான் உடுத்திக் கொள்ளத் தவிக்கிறேன்
இந்தக் குளிருக்கு!

காற்றே
உனக்குக் குளிர் தாளாவிட்டால்
வேறு எங்கேனும் போய்த் தொலை
கதறிக் கொண்டு வந்து
என்னை ஏன் குதறுகிறாய்

நானோ
துளைகளே இல்லாத இன்னுமோர்
கவசத் தோல் கேட்டு
இங்கே தவமிருக்கிறேன்

திமு திமுவென வந்திறங்கும்
வேற்றுக் கோளின்
வெள்ளைப் சிப்பாய்களாய்
எங்கும் பனி

கொட்டுகிறது...
கொட்டுகிறது...
அன்று
பூத்துப் பூத்துக் குலுங்கிய
பூக்களெல்லாம் இன்று எங்கே

சிகப்பும் மஞ்சளுமாய்
வர்ணங்கள் மாறி மாறி
சின்னச் சின்னக் கன்னியராய்
கைகோர்த்தும் முகம்முட்டியும்
ஆடி ஆடி
உள்ளத்தின் உட்தளங்களையும்
கொள்ளையடித்த
அந்த இலைகள் எங்கே

எழிலத்தனையும் இழந்துவிட்டு
எங்கெங்கும்
சிலுவையில் அறைந்த ஆணிகளாய்
கண்ணீர்க் கசிந்து நிற்கும்
மூளி மரங்களே இன்று மிச்சம்

உயிர்களை
வேர்களில் ஒளித்து வைத்துக் கொண்டு
இன்னும் எத்தனை நாட்கள்தாம்
தங்களையே கரங்களாய் உயர்த்தி
அந்த வானதேவனிடம் யாசித்து நிற்குமோ
இந்தப் பச்சை ஜீவன்கள்

அங்கிங்கெனாதபடி
எங்கும் பனியின் படர்வு

எண்ணிக்கையில் அடங்காத
வெள்ளை வெள்ளைப் பிரமிடுகளாய்

வெண்ணிற முகமூடிக்குள்
ஒளிந்து கொண்டு குளிர் மூச்சு விடும்
ராட்சச பூதங்களாய்

சிறைப்பட்ட வசந்தங்கள்
வானிலிருந்து
சிந்தும் வெள்ளை இரத்தமாய்
எங்கும் பனியின் படர்வு

எப்படி?

என் கண்கள் பார்த்திருக்க
இந்தக் காடு மலை மேடுகளெல்லாம்
ஒரே நாளில் வெள்ளை ஆடைகட்டி
விதவைகளாகிப் போயின

ஆடைகளும்
ஆடை உடுத்திக் கொள்ளும்
இந்த நாட்களில்
ஆள் அரவமில்லாத அனாதை வீதிகளில்
காற்று மட்டும் கட்டறுந்து ஓடுகிறது

காது மடல்களை
கண்ணில் அகப்படாத கொடிய மிருகம்
தன் விசப் பற்களால்
கடித்துத் துப்பியதுபோல்
ஒரு சுளீர் வலி நிரந்தரமாய் நீள்கிறது

தொடு உணர்வுகளெல்லாம்
எங்கோ தொலைந்துபோயின

கால்களைத் தொட்டுப் பார்க்கக்
கைகளை நீட்டினால்
கால்களையும் காணவில்லை
தொடப்போன கைகளையும் காணவில்லை

இதயத்துக்குள்
இனம்புரியாத ஏதோ ஓர்
இக்கட்டு நிலவுகிறது

நுரையீரல் சுவர்களில்
குளிர் ஈக்கள்
சவப்பெட்டிக் கூடு கட்டுகின்றன

பனிக்குள் காணாமல்போன
போக்குவரத்துச் சாலைகளில்
ஓடமறுக்கும் காருடன்
ஒரு பொழுது சிக்கிக் கொண்டால்
கடைசி ஆசை என்னவென்று கேட்காமலேயே
கொன்றுபோடும் இந்தக் குளிர்

வீதியெங்கும் வெள்ளைச் சகதி
சாலைகளில் உப்பைத்தூவி
உழுது உழுது நின்றால்தான்
இங்கே கார்கள் ஓடும்

குளிர்ப்பதனப் பெட்டிக்குள் அமர்ந்து
இறுக மூடிக்கொண்டுவிட்டால்
இந்தக் கனடியக் குளிரிலிருந்து
கொஞ்சம் தப்பிக்கலாமோ
என்றுகூடத் தோன்றுகிறது

ஒரே ஒருநாள்
இந்த மின்சாரம் தன் மூச்சை
நிறுத்திக் கொண்டுவிட்டால்
ஒட்டுமொத்த மக்களும்
மூச்சின்றிப் போவார்களோ
என்ற பயம் என்னை முட்டுகிறது

பூமியே
கொஞ்சம் வேகமாய் ஓடு

மீண்டும் அந்த கனடிய வசந்தங்களில்
எங்களைத் தவழவிடு

அங்கேயே நீ
நிதானமாய் இளைப்பாறலாம்

அன்புடன் புகாரி

No comments: