தமிழ் கனடா - 005 வந்தேறிகளின் நாடு


கனடாவின் சரித்திரத்தைப் பாடமாக எடுத்தால் எல்லோரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துவிடலாம். அவ்வளவு எளிமையானது. கனடா என்பது நேற்றுதான் பூத்த முள்ளில்லா வெள்ளை ரோஜாதான். ஆனாலும், பழமை போற்றும் பண்பாடுகளில் சிறந்து விளங்கும் அற்புத நாடு.

பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இங்கே பூர்வீகக் குடியினரான (அபாரிஜினல்) செவ்விந்திய மக்கள் வாழ்கிறார்கள். புதிய குடிவரவாளர்களால், இன்று அவர்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவிகிதம்தான்.

ஒரு முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இங்கே வந்தார்கள். ஒரு அறுபது வருடங்களாக ஐரோப்பா, ஆசியா, தென்னமரிக்கா, கரிபியன் தீவுகளிலிருந்து மக்கள் இங்கே வர ஆரம்பித்தார்கள்.

இந்தியர்கள் அறுபதுகளிலேயே கனடா வரத் தொடங்கிவிட்டார்கள். ஆரம்பத்தில் பெரும்பாலும் சீக்கியர்களும் குஜராத்தியர்களுமே வந்தார்கள். இந்திய சாதனையாக ஒரு சீக்கியர் கனடாவின் ஒரு மாகாணத்திற்கு முதலமைச்சர் ஆகியிருக்கிறார். கனடாவில் முதலமைச்சரை Premier என்றழைப்பார்கள். பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் எண்பதிற்குப் பிறகே கனடா வந்தார்கள். இவர்களைப் பற்றித்தான் நாம் முழுமையாய் இந்தக் கட்டுரை முழுவதும் பேசப் போகிறோம்.

'கனடான்னா இன்னாடா அர்த்தம் ?' இப்போதய வாண்டுகள் எல்லாம் சும்மா இருப்பதில்லை. எல்லாவற்றுக்குமே ஒரு கேள்விச் சுத்தியல் வைத்திருக்கிறார்கள். கனடா என்ற பெயர் எப்படி வந்தது? இதற்குச் சில குட்டிக்கதைகள் வைத்திருக்கிறார்கள் இங்கே.

'அடியக்கா மங்கலம்' என்று தஞ்சாவூரில் ஒரு கிராமத்திற்கு எப்படிப் பெயர் வந்தது என்று ஒரு சுவாரசியமான கதைவிடுவார்கள் ஊரில்.

புல்லுக் கட்டை வேப்பெண்ணை வழியும் தலையில் சுமந்துகொண்டு ஒத்தையடிப் பாதையில் நடந்துகொண்டிருக்கிறாள் ஒரு கிராமத்துச் சிட்டு. அவள் அக்கா மங்கலம் என்பவள் அவளுக்கு முன் ஒரு கால் கிலோமீட்டர் தூரத்தில் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள்.


அங்கே முதன் முதலில் வந்த ஒரு வெள்ளைக்காரன் தங்கையிடம் கேட்கிறான் ஆங்கிலத்தில், 'பெண்ணே பெண்ணே நில்லு! இந்த ஊரின் பெயரைச் சொல்லு!' அவ்வளவுதான், உடம்பெல்லாம் தேகம்பம் வந்துவிட்டது இவளுக்கு. பூகம்பம் தேகத்துக்குள் வந்தால், தேகம்பம்தானே :) நடுங்கும் குரலில் அக்காவை அழைத்தாள் அவசரமாக, 'அடியக்கா மங்களம்...' அன்றிலிருந்து அது அடியக்கா மங்களம் ஆனது என்பார்கள் வரலாற்று அறிஞர்கள்(!)

இன்னொரு கதை இன்னும் சுவாரசியமானது

சவூதியில் கடினப்பணிக்காக ராஜஸ்தானியர் பலர் கூட்டம் கூட்டமாக வந்து இறங்கினார்கள். எல்லோருக்கும் பெயர் மகராஜ் என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட நிர்வாகி விசாரித்தார்.

வந்த முதல்நாள் அறிமுகப்படலத்தில், 'What is your name?' என்று கேட்ட வெள்ளைக்கார கண்காணிப்பாளரிடம், ஆங்கிலம் தெரியாததால், வழக்கம்போல 'மகராஜ்?' என்றிருக்கிறார்கள் அனைவரும். அதாவது, 'என்ன கேட்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை! அதைத் திரும்பக் கேளுங்கள்!' என்பதற்கு மரியாதையாக இப்படி கிராமத்துத் தலைவரிடம் கேட்பதே அவர்களுக்கு வழக்கம். சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் மகராஜ் என்று பெயர் எழுதிவிட்டு தன் கடமையை முடித்துக்கொண்டு விட்டார் கடமை வீர கண்காணிப்பாளர்.

இதுபோன்ற குட்டிக்கதைகள் கனடாவுக்கும் உண்டு.

7 comments:

mohamedali jinnah said...

கனடாவும் கவிதயும் மனதில் மகிழ்வினைத் தந்து குளிர வைக்கின்றது. நீங்கள் எழுதும் தமிழ் கனடா ஒரு சரித்திரப்

பாடமாக அமையும்.

காமேஷ் said...

கனடாவைப் பற்றிய தொகுப்பு அருமை..


~காமேஷ்~

அமுதா கிருஷ்ணா said...

interesting news about mahraj.....

செல்வன் said...

கனடாவுக்கு வந்து ஆறுமாதம், ஒரு வருடம் வேலை பார்க்கலாம் என எண்ணம் உண்டு.ஆறு வருடத்துக்கு ஒரு முறை சப்பாட்டிக்கலில் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.கிடைத்தால் கனடா வந்து வேலை பார்க்கணும்.அல்லது ஆஸ்திரேலியா போனாலும் போகலாம்.பார்க்கலாம் வாய்ப்பு எப்படி அமைகிரதென்று

தேவ் said...

//சவூதியில் கடினப்பணிக்காக ராஜஸ்தானியர் பலர் கூட்டம் கூட்டமாக வந்து

இறங்கினார்கள். எல்லோருக்கும் பெயர் மகராஜ் என்று இருப்பதைக் கண்டு
ஆச்சரியப்பட்ட நிர்வாகி விசாரித்தார்.

வந்த முதல்நாள் அறிமுகப்படலத்தில், 'What is your name?' என்று கேட்ட
வெள்ளைக்கார கண்காணிப்பாளரிடம், ஆங்கிலம் தெரியாததால், வழக்கம்போல
'மகராஜ்?' என்றிருக்கிறார்கள் அனைவரும். அதாவது, 'என்ன கேட்கிறீர்கள்?
எனக்கு ஒன்றும் புரியவில்லை! அதைத் திரும்பக் கேளுங்கள்!' என்பதற்கு
மரியாதையாக இப்படி கிராமத்துத் தலைவரிடம் கேட்பதே அவர்களுக்கு வழக்கம்.
சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் மகராஜ் என்று பெயர் எழுதிவிட்டு தன் கடமையை
முடித்துக்கொண்டு விட்டார் கடமை வீர கண்காணிப்பாளர்.


இதுபோன்ற குட்டிக்கதைகள் கனடாவுக்கும் உண்டு. //


அடியக்கா !நல்ல ஜோக்

தேவ்

சாதிக் said...

உடம்பெல்லாம் தேகம்பம் வந்துவிட்டது இவளுக்கு. பூகம்பம் தேகத்துக்குள் வந்தால், தேகம்பம்தானே :)
அருமை உடல் நடுக்கத்துக்கான புதுச் சொல்... “ தேகம்பம்” . சுருக்கமாக சொல்ல எளிமையாக இருக்கிறது எல்லோரும் இதை பயன்படுத்தலாம் போலிருக்கிறது.


இதை வினைச் சொல்லில் பயன் படுத்தினால் எப்படிச் சொல்லலாம்.

சா.கி.நடராஜன் said...

அன்பு புகாரி
அருமையான செய்திகளை அளிக்கின்றீர்கள்
தினமும் ஒன்று என்று அனுப்புங்கள்
வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.