8 எதுவுமில்லாததில்...


எதுவுமில்லாததில்
எல்லாம் இருக்கிறது

எல்லாம் இருப்பதில்
எதுவுமே இல்லை

இருப்பதையும் இல்லாததையும்
ஒன்றுபோலவே காட்ட
கண்ணும் மனமும் மட்டுமின்றி
உயிரும்கூட அதிசயமாய்
ஒரே குரல் தந்தபோதும்
பறந்தோடும் காலம் வந்து
கரகர சுருதியில்
மறுப்புக்குரல் தருவது
வேடிக்கையான வாடிக்கை

இருப்பதில் இல்லாததையும்
இல்லாததில் இருப்பதையும்
எடுத்துக் கொறித்தவண்ணம்
உயிர்ப் பறவையின் சிறகசைப்பு

இருக்கின்றதென்ற எண்ணத் துடிப்பில்
இல்லாமல் இருப்பதை
தவிப்போடு தேடும் வாழ்க்கையில்
எல்லாமும் அந்த நொடிப் பூரணம்

இப்படியான
பலகோடி நொடிப் பூரணங்களின்
தொகுப்பே வாழ்க்கை

உடைந்தழிந்து உடைந்தழிந்து
கழிந்துபோனாலும்
நீரில் நீந்தும் நீர்க் குமிழ்கள்
வாழ்வில் நீந்தும் வாழ்க்கைத் துளிகளாய்
நிஜமானவைதான்

8 comments:

N Suresh said...

சித்தர்களில் ஒருவர் புதுக்கவிதை எழுதினதுபோல் உள்ளது
அருமை!

அன்புடன்
என் சுரேஷ்

Unknown said...

:)))))) நன்றி சுரேஷ்

Unknown said...

//இருப்பதில் இல்லாததையும்
இல்லாததில் இருப்பதையும்
எடுத்துக் கொறித்தவண்ணம்
உயிர்ப் பறவையின் சிறகசைப்பு //

அருமையான வரிகள் நண்பரே :)

கோகுலன் said...

//இருப்பதில் இல்லாததையும்

இல்லாததில் இருப்பதையும்
எடுத்துக் கொறித்தவண்ணம்

உயிர்ப் பறவையின் சிறகசைப்பு//

மிகச் சிறந்த தத்துவம்.. கவித்துவம்..

//

இருக்கின்றதென்ற எண்ணத் துடிப்பில்
இல்லாமல் இருப்பதை
தவிப்போடு தேடும் வாழ்க்கையில்

எல்லாமும் அந்த நொடிப் பூரணம்//

ஆழச் சிந்திக்க வைக்கும் மகா வரிகள்..

//உடைந்தழிந்து உடைந்தழிந்து

கழிந்துபோனாலும்
நீரில் நீந்தும் நீர்க் குமிழ்கள்
வாழ்வில் நீந்தும் வாழ்க்கைத் துளிகளாய்
நிஜமானவைதான்

//
உண்மைதான்.. என்னைப்பொருத்தவரை வாழ்வில் நீந்தும் வாழ்க்கைத் துளிகளைக் காட்டிலும் நிஜமெனச் சொன்னாலும் மிகச் சரியே..

கவிதை நல்ல சொற்பின்னல் நண்பர் புகாரி!

வேல் said...

ஏதுமில்லாததில்.... எப்படி எல்லாம் இருக்கிறது என்று அருமையான கவிதை ..! கீழ்கண்ட வரிகளை நல்ல கவி வரிகள்..!




// இருப்பதில் இல்லாததையும்

இல்லாததில் இருப்பதையும்
எடுத்துக் கொறித்தவண்ணம்
உயிர்ப் பறவையின் சிறகசைப்பு
இல்லாமல் வாழ்வதை நல்லா சொல்லிருக்கீங்க..!



இருக்கின்றதென்ற எண்ணத் துடிப்பில்
இல்லாமல் இருப்பதை
தவிப்போடு தேடும் வாழ்க்கையில்

எல்லாமும் அந்த நொடிப் பூரணம் //
தேடி தேடி தொலைந்து விடாமல் அழகா ஒரு கவிதை போட்டாச்சு... வாழ்த்துக்கள் புகாரி...



--
மிக்க அன்புடன்
வேல்

கவிநயா said...

//இருப்பதில் இல்லாததையும்

இல்லாததில் இருப்பதையும்
எடுத்துக் கொறித்தவண்ணம்

உயிர்ப் பறவையின் சிறகசைப்பு//

அழகாக விழுந்திருக்கு வாழ்க்கை தத்துவம்...

//உடைந்தழிந்து உடைந்தழிந்து

கழிந்துபோனாலும்
நீரில் நீந்தும் நீர்க் குமிழ்கள்
வாழ்வில் நீந்தும் வாழ்க்கைத் துளிகளாய்

நிஜமானவைதான்//

யதார்த்தமான உண்மை. இன்று மட்டுமே நிஜம் என்பது போல...

சீனா said...

அன்பின் புகாரி

இருப்பதும் இல்லாததும் - இல்லாததும் இருப்பதும்
வாழ்வின் தத்துவங்கள் -
இல்லாததில் இருப்பது கண்ணுக்குத் தெரியாது
இருப்பதில் இல்லாதது மனதிற்குப் புரியாது

உடைந்து உடைந்து அழிந்து போனாலும்
நீர்க்குமிழிகள் நிஜமானவையே

சொற்சிலம்பாட்டம் ஆடுகிற அற்புதக் கவிதை

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா

துரை said...

அன்பு ஆசானுக்கு
கவிதை பற்றிச்சொல்ல என்னிடம் எதுவுமில்லை