நீ தடுத்தாலும் உனையள்ளித் தாலாட்டுப் பாடிவிடும்

உள்ளத்தில் புரண்டோடும்
ஓரு கோடிக் கவி நதிகள்
அவை உயிரை எழுத்தாக்கி
உணர்வேந்தும் நவமணிகள்

சொல்லுக்குப் பொருளென்று
சில நூறு விளக்கங்கள்
அது சொல்லவந்த சேதிமட்டும்
சொன்னவனின் நெஞ்சுக்குள்

பள்ளத்தின் நிலையென்றும்
பரிதவிக்கும் தாகங்கள்
அதன் பசியுள்ளம் கேட்பதெலாம்
பிரசவிக்கும் மேகங்கள்

வல்லோனும் வாழ்வதில்லை
வசைமொழியே இல்லாமல்
தினம் வந்தவற்றுள் விசம்நீக்கி
வாழ்வதுதான் பெருவாழ்வு

கொண்டோடும் நதியோடு
கொடியாகச் சென்றாலும்
உன் கரைதேடும் கண்ணுக்குள்
கொள்வாய் ஓர் நம்பிக்கை

தண்டோடு தாழம்பூ
தனிவாசம் வீசிவரும்
நீ தடுத்தாலும் உனையள்ளித்
தாலாட்டுப் பாடிவிடும்

4 comments:

சீனா said...

அன்பின் புகாரி

வழக்கம் போல் தமிழில் விளையாடும் கவிதை

உள்ளத்தில் ஓடும் கவிநதிகள் உயிரை எழுத்தாக்குகின்றன

சொல்லுக்குப் பொருள் - சொல்பவர்கள் படிக்கும் பல பேர்
சொல்லவந்த சேதி சொன்னவனுக்கு மட்டும் - மட்டுமே தெரியும் சேதி

பசிக்கும் போதெல்லாம் பிரசவிக்கும் மேகங்கள்

வாழ்வில் வசை மொழிகள் வரத்தான் செய்யும் - விசம் நீக்கி வாழத் தெரிந்தவன் வாழ்வான்

தண்டோடு தாழம்பூ தனி வாசம் வீசி வந்து - தடுத்தாலும் அள்ளித் தாலாட்டும்

ஆகா ஆகா - கற்பனை வெள்ளம் கரை புரண்டோட
கவிஞன் கூறுவது புரிந்தாலும்
அவனுக்கு மட்டுமே தெரிந்தது அது

நல்ல கவிதை - படித்தேன் - ரசித்தேன் - மகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

சிவா said...

சொல்லுக்குப் பொருளென்று
சில நூறு விளக்கங்கள்
அது சொல்லவந்த சேதிமட்டும்
சொன்னவனின் நெஞ்சுக்குள்


முற்றிலும் உண்மை ஆசான் ... படிப்பவர்கள் தான் வெவ்வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள்


வல்லோனும் வாழ்வதில்லை
வசைமொழியே இல்லாமல்
தினம் வந்தவற்றுள் விசம்நீக்கி
வாழ்வதுதான் பெருவாழ்வு


அப்படித்தானே இருக்கணும்


அருமையான கவிதை ஆசான்

பூங்குழலி said...

சொல்லுக்குப் பொருளென்று
சில நூறு விளக்கங்கள்
அது சொல்லவந்த சேதிமட்டும்
சொன்னவனின் நெஞ்சுக்குள்

பள்ளத்தின் நிலையென்றும்
பரிதவிக்கும் தாகங்கள்
அதன் பசியுள்ளம் கேட்பதெலாம்
பிரசவிக்கும் மேகங்கள்

அற்புத வரிகள்

Unknown said...

//உள்ளத்தில் புரண்டோடும்
ஓரு கோடிக் கவி நதிகள்
அவை உயிரை எழுத்தாக்கி
உணர்வேந்தும் நவமணிகள்

சொல்லுக்குப் பொருளென்று
சில நூறு விளக்கங்கள்
அது சொல்லவந்த சேதிமட்டும்
சொன்னவனின் நெஞ்சுக்குள்//

சொல்லின் செல்வர்.... விளையாடி இருக்கீங்க


//பள்ளத்தின் நிலையென்றும்
பரிதவிக்கும் தாகங்கள்
அதன் பசியுள்ளம் கேட்பதெலாம்
பிரசவிக்கும் மேகங்கள்

வல்லோனும் வாழ்வதில்லை
வசைமொழியே இல்லாமல்
தினம் வந்தவற்றுள் விசம்நீக்கி
வாழ்வதுதான் பெருவாழ்வு

கொண்டோடும் நதியோடு
கொடியாகச் சென்றாலும்
உன் கரைதேடும் கண்ணுக்குள்
கொள்வாய் ஓர் நம்பிக்கை//


நம்பிக்கை கொண்டேன்...


//தண்டோடு தாழம்பூ
தனிவாசம் வீசிவரும்
நீ தடுத்தாலும் உனையள்ளித்
தாலாட்டுப் பாடிவிடும்//


நிச்சயம் பாடுமா...

நிஜமாய் பாடுமா.....