அன்பே
உன் விழிகளுக்கு மாத்திரமே சாத்தியம்
இப்படிச் சிந்தாமல் சிதறாமல்
சன்னமாய்ச் சொல்லும் மௌனமொழிக் கலை

உனக்குத் தெரியுமா
இப்பொழுதெல்லாம் என் உள்ள வெளியெங்கும்
ஒரே குதூகலக் கோலம்தான்

உன் விழிகளைப் புணர்ந்த
என் உயிரின் புளகாங்கிதம் ஒரு சாதாரணமா

நொடி தோறும் உன் பெயர் பொறித்த
நினைவுத் தேர்கள் எனக்குள்
அழுந்தி அழுந்தி அசைய

துடிதுடிக்கும் என் உயிர் பறக்கப் பரபரப்பது
மீண்டும் மீண்டும்
உன் விழிவனத்துக்குள் மட்டும்தான்

ஏழுலக சத்தியங்களும்
ஒரே குரலில் ஒப்புக்கொள்ளூம்
சத்தியம்தான் இது நம்பு

நம்பாமல்
என்னைச் சோதிக்கும் பிரியமாயும்
உன் விழிகளை மூடாதே

மூடினால் அந்த அரை நொடியில்
என்னைப் பிரிவது
உன் பார்வை மட்டுமல்ல அன்பே
என் ஆவியும்தான்

2 comments:

vasu balaji said...

/உன் விழிகளைப் புணர்ந்த
என் உயிரின் புளகாங்கிதம் ஒரு சாதாரணமா/

/மூடினால் அந்த அரை நொடியில்
என்னைப் பிரிவது
உன் பார்வை மட்டுமல்ல அன்பே
என் ஆவியும்தான்/

ம்ஹூம். சான்ஸே இல்ல. இப்படி யோசிக்கிறதும் அழகா சொல்றதும் அபாரம்.

சிவா said...

அருமை