மல்லிகையின் மாய மணம்
என் உயிரைக் கிள்ளிக்கிள்ளி
என்னவோ செய்யும்
மனதின் ரசனைமிகு இடுக்குகளில்
மந்திர வேர்விட்டு
மெல்ல மெல்ல ஊடுருவும்

அந்தக் குட்டிக்குட்டி
வெள்ளை மலர்களைக் கண்டாலே
கனவுகளில் கவிழும் கப்பல்களாய்
மிதக்கும் என் கண்களுக்கு
கொள்ளை அழகாய்த் தெரியும்

ரோஜாவோ
கோடை விழிகளுக்குள் குடியேற வரும்
சில்லென்ற குளிரழகு
இதயத்தை இழுத்து மடியில் இட்டுக்கொண்டு
என் வியப்புகளில் முத்தமிடும் பேரழகு

தொடத் தொட மிருதுவாய்
விரல்களில் ஒட்டிக்கொண்டு
உணர்வுகளில் கரைந்துபோகும்
மென்மையிலும் மென்மை

இன்னுமின்னும்
ஆயிரம் ஆயிரம் பூக்களின்
அழகும் வாசமும் மகரந்தச் சொர்க்கமும்
ஒன்றாய் முகாமிட்டிருக்கும் உன்னோடு
தடுக்கத் தடுக்கக் கேளாமல் அலைகிறது
என் மனம் பித்துப்பிடித்து

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

6 comments:

தருமி said...

இந்த மூவழகும் ஒன்றாய்
முகாமிட்டிருக்கும் உன்னோடு//

அப்போ, அந்த மூணாவது 'அவுகளா"?

ஆயிஷா said...

இதயத்தை இழுத்து
மடியில் இட்டுக்கொண்டு
என் வியப்புகளில் முத்தமிடும் பேரழகு

அழகு.


தொடத் தொட மிருதுவாய்
விரல்களில் ஒட்டிக்கொண்டு
உணர்வுகளில் கரைந்துபோகும்
மென்மையிலும் மென்மை
பேர‌ழகு.



மல்லிகைக்கு அடுத்ததாக
என் இழைகளில் குழையும்பூ
ரோஜாப்பூ


உங்க கவிதைகளில் ஏதோ ஒரு சுவை உள்ளது ஆசான்.
அன்புடன் ஆயிஷா

பூங்குழலி said...

இதயத்தை இழுத்து
மடியில் இட்டுக்கொண்டு
என் வியப்புகளில் முத்தமிடும் பேரழகு
தொடத் தொட மிருதுவாய்

விரல்களில் ஒட்டிக்கொண்டு
உணர்வுகளில் கரைந்துபோகும்
மென்மையிலும் மென்மை

ரொம்ப அழகான வரிகள்

சிவா said...

மிகவும் அழகான கவிதை ஆசான்

மயூ மனோ (Mayoo Mano) said...

கதைப்பதும் கவியென்றால் கவிதான் என்ன செய்யும், உங்களிடம் கட்டுண்டு கிடப்பதை விட்டு விட்டு. அருமையான கவி....

சாதிக் அலி said...

//மல்லிகையின் மாய மணம்
என் உயிரைக் கிள்ளிக்கிள்ளி
என்னவோ செய்யும்
மனதின்
ரசனைமிகு இடுக்குகளில்
மந்திர வேர்விட்டு
மெல்ல மெல்ல ஊடுறுவும் ///

திருமண மற்றும் இதர வைபவங்களில் வீடுகளில் பெண்கள் கூட்டத்திற்கிடையே உலவும் போது நுகரும் சந்தர்ப்பங்களின் பொழுதும்,
கணவன் மனைவியின் அந்தரங்கப் பொழுதுகளில் நுகரும் பொழுதும்
இந்த மல்லிகை மலர் செய்யும் மாயாஜால உணர்வை சொல்ல
நினைத்தாலும் இதோ தெண்டையில் இருக்கிறது வாய் வரை வார்த்தை
வர மாட்டேன்குது என்று விளக்க இயலாது தவித்த உணர்வுக்கு
வார்த்தை வடிவம் கொடுத்து விட்டீர்கள் புஹாரி சார்...


அருமை...


ரோஜாவை இந்த உலகமே கொண்டாடுகின்றது. அன்பு, மற்றும் காதலை
வெளிப்படுத்த ரோஜா தான் சிறந்ததாய் காதலர்களுக்குத் தெரிகிறது.
இது ரோஜாவின் சுகந்த நறுமணத்தாலா அல்லது இதழ்கள் விரித்து
தன் அழகால் உள்ளங்களைக் கொள்ளைக் கொள்வதாலா?


இப்படி ரோஜா தனக்கொன ஓர் இடத்தை காதலர்களிடம் பிடித்திருந்தாலும்
மல்லிகை மலர் தான் நம் நாட்டில் அதுவும் நம் தமிழகத்தில் பெண்ணினத்தின்
சொத்தாக உரிமை பெற்றுள்ளது.


தமிழ்நாட்டை விட மல்லிகையை அதிகமதிகம் பயன்படுத்தும் வேறு நாடு உண்டோ.