காதல் புரிதலும் காதலைப் புரிதலும்

காதல் புரிதலும் காதலைப் புரிதலும்


காதலைப் புரிந்துகொள்வது வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைப்போல காலத்துக்குக் காலம் மாறித்தான் வந்திருக்கிறது.

காதல் நம்மிடம்தான் இருக்கிறது யாரிடமோ இல்லை என்ற தெளிவு வரும்போது நம்மை நாம் அதிகம் காதலிக்கிறோம்.

யார் யாரோ எவ்வெப்போதோ நம் காதலை அவர்கள் காதலோடு இணைத்து வீடுகட்டி விளையாட வருகிறார்கள்.

மாரில் சாய்த்து ஊட்டி விடுபவர்களே நம்மை ஒடித்தும் போடுகிறார்கள்.

எதிர்பாரா தருணங்களில் மிகுந்த ஆச்சரியமானதாய்ச் சட்டென தொடங்கி கண்ணீரில் வளர்ந்து வெறும் அழுகையாய் மட்டுமே நின்றுவிடுகிறது சில காதல்.

சமுதாய சாத்தியமில்லாக் காதல்கள்தான் உலகெங்கிலும் அழுத்தமானதாய் வியாபித்திருக்கின்றன. அவைதான் ஆழமாய் உணரப்படுகின்றன. உயிர் கரையும் அழுகைகளை ஆட்கொள்கின்றன.

காதலை கல்யாணத்தோடு சம்பந்தப்படுத்துவது ஒரு வயது. கல்யாணத்திற்குப்பின் காதல் வருவது இன்னொரு வயது. ஒடிந்துகிடந்தபோது முகத்தில் நீர் தெளிக்கும் மேகமாய் காதல் வருவது பிரிதொரு வயது.

இப்படியாய், வருகிறது வருகிறது என்று சொல்வதைவிட காதல் நம்மிடமே இருக்கிறது. அது சேர்வாரோடு சேர்ந்தால் மட்டும் சிவக்கிறது என்று சொல்வதே சரி.

சேர்வாரெல்லாம் அனைத்தாலும் சேர்ந்தே இருப்பார் என்றால் அது ஒருவரோடு முடிந்துபோகலாம்.

ஓடிப்போயோ அல்லது உடனிருந்தோ காதலை காயப்போடும் நிலை வரும்போது தனிமையை விரும்பாத காதல் சந்தர்ப்பங்களால் மீண்டும் சிலிர்த்துக்கொள்கிறது.

ஒரு சமயம் ஒருவர் மீது காதல் என்பதை நம்பலாம்.
ஆனால் ஒருமுறையே காதல் வரும் என்பது சுத்தப் பொய்.

காதலைத் தொட்டுப் பார்க்காத பழைய நாட்களில் ஒவ்வொரு பார்வையிலும் கரைந்து நிற்கிறோம்.

நல்ல காதலின் மடியில் கிடக்கும்போது எந்தப் பார்வையும் தீண்டமுடியாத தூரத்தில் தீபமாய் எரிகிறோம். இயலாமைகள் தாக்கிய வடுக்களின் மீது வந்து ஒட்டும் கண்ணீரோடு கண்ணீர் சேர்த்து ஆனந்தக் காதலைப் பெறுகிறோம்.

இப்படியாய் காதல் என்பது ஒன்றோடு மட்டுமே நின்றுவிடும் மூச்சாய் இல்லை பலருக்கும்.

2 comments:

சீனா said...

அன்பின் புகாரி

காதலைப் பற்றி ஒரு உரையா - புகாரிக்குத் தெரியாத காதலா

நன்று நல்வாழ்த்துகள்

யாழினி said...

வரிகள் ஒவ்வொன்றும் நன்றாக இருக்கின்றன. வாசிக்க சுவைக்கின்றன!